யாகாவார் ஆயினும் நாகாக்க.. மிரட்டல் விடுக்கும் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் எச்சரிக்கை
சென்னை: பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கேள்வி கேட்ட செய்தியாளர்களின் நிறுவனத்தின் பெயரை கேட்டுக் கொண்டார் அண்ணாமலை. பின்னர் அந்த நிறுவனம் தொடர்பாக கடுமையாக சாடி பேசினார். ஒரு கட்டத்தில் யூ டியூபர்கள் யாரும் பிரஸ் மீட்டுக்கே வரக் கூடாது என்றார்.
அண்ணாமலையில் இந்த போக்குக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் மன்றத்தின் அறிக்கை: இன்று (04-01-2023) புதன்கிழமை காலை சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை. புதியதலைமுறை செய்தியாளர் திரு.இரா.முருகேசன், சமீபத்திய கோயம்புத்தூர் ஈஷா மையத்தில் இருந்து காணாமல் போய் பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவரின் மரணம் குறித்து எழுப்பிய கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தன் நிதானத்தை இழந்த தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் , கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் எந்த ஊடகம் என்று கேட்க ஆரம்பித்து செய்தியாளரின் கேள்விக்கு நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசியிருக்கிறார் அண்ணாமலை .
ஊடகவியலாளர் கேள்வியை எதிர்கொள்ள முடியாவிட்டால் அமைதி காக்கலாம். மாறாக ஊடகவியலாளர்கள் , எந்த ஊடகம் என்பதை கேட்பதுடன் அவர்களின் கேள்விக்கும் செய்தி சேகரிக்கும் பணி குறித்தும் அவதூறு செய்வது ஆரோக்கியமான செயல் அல்ல..இந்த நிதானமற்ற போக்கு ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்த மோசமான அணுகுமுறையை மிரட்டல் போக்கை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசியலில் வளர்ந்து வரும் திரு.அண்ணாமலை அவர்கள் ஊடகங்களின் உரிமையை உணர்வுகளை உரசிப்பார்க்கும் போக்கை கைவிட்டு நயத்தகு நாகரீக உறவை ஊடகங்களுடன் பேண கற்றுக் கொள்ள வேண்டும்.* யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. - குறள்: 127 இவ்வாறு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications