இன்று இந்த பகுதியெல்லாம் ஹாட்ஸ்பாட்.. நாளை முதல் தென் தமிழகத்திற்கு அதிக மழை! சென்னை ரெயின்ஸ் அலர்ட்
சென்னை: புதுச்சேரி மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக இருக்கலாம் என சென்னை ரெயின்ஸ் ட்விட்டர் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு மழை தீவிரமடைந்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் நேற்று முன் தினம் முதல் இன்று அதிகாலை வரை மிக கனமழை பெய்தது. ஒரு நாள் மழைக்கே சென்னையில் தண்ணீர் தேங்கும் சூழல் இருந்த போதிலும் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகளால் தண்ணீர் வடிந்தது.
எனினும் இன்னமும் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இந்த இரு நாட்களில் சென்னையில் 30
ஆண்டுகளுக்கு பிறகு மிக அதிக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னையில் கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி 13 செ.மீ. மழை பெய்தது. அது போல் நவம்பர் 1, 1964 ஆம் ஆண்டு 11 செ.மீ. மழையும் பெய்தது.
இந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி 20 செ.மீ மழை பெய்துள்ளது. எனவே இந்த மழை 1990 மழையை முறியடித்துள்ளது என தெரிவித்துள்ளது.

4 நாட்களுக்கு மழை
மேலும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றைய தினம் மழையின் அளவு குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேகக் கூட்டங்கள் நெல்லூரை ஒட்டிய பகுதிகளுக்கு செல்வதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சென்னை ரெயின்ஸ்
இந்த மழை குறித்து சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை தமிழக கடலோர பகுதிகளில் ஆக்டிவ்வாக உள்ளது. இதனால் கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள சென்னை முதல் டெல்டா வரை பல இடங்களில் மழை பெய்யும். அது போல் புதுவையைச் சுற்றியுள்ள ஓரிரு இடங்கள் இன்றைய தினம் ஹாட்ஸ்பாட்டாக அமையும்.

மிதமான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை தொடரும். அரபிக் கடலை நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மெல்ல நகர்வதால் நாளை முதல் தென் தமிழகத்திற்கு மழையை அதிகரிக்கும். இந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அரை மணி நேரம் முதல் 45 நிமிடங்கள் வரை பிரேக் கொடுத்து சென்னையில் மிதமான மழை பெய்யத் தொடங்கும் என சென்னை ரெயின்ஸ் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications