சென்னையில் கனமழையால் ஸ்தம்பித்த உணவு டெலிவரி சர்வீஸ்.. ஸ்விக்கி, சொமேட்டோ, டன்சோ சேவைகள் நிறுத்தம்?
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களிலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் நகரின் பல்வேறு இடங்களிலும் சொமேட்டோ, ட்ன்சோ சர்வீஸ் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னையில் கடந்த 2 நாட்களாக அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது
குறிப்பாக நேற்று அதிகாலை மிகக் குறுகிய நேரத்தில் அதிக மழை கொட்டித் தீர்த்தது. வரும் நாட்களிலும் மழை தொடரலாம் என்ற நிலையில் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வெள்ளம்
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடுப்பு அளவுக்கு வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும், சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. மோட்டர் மூலம் மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், பல்வேறு இடங்களிலும் இதே நிலையே தொடர்கிறது.

தேங்கிய மழைநீர்
நகரின் பல முக்கிய சாலைகளில் அதிக அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிந்தால் மட்டுமே மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என மின்துறை அறிவித்துள்ளது. இப்படித் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி
நேற்றைய தினம் கொட்டும் மழையிலும் சென்னைவாசிகள் பலருக்குச் சரியான நேரத்தில் உணவைக் கொண்டு வந்து கொடுத்தது ஸ்விக்கி, சொமேட்டோ மற்றும் ட்ன்சோ ஊழியர்கள் தான். கொட்டும் மழையையும், சாலையில் தேங்கிய மழை நீரையும் கூட கருத்தில் கொள்ளாமல் ஆர்டர் செய்தவர்களுக்கு உணவைச் சரியான நேரத்தில் கொண்டு சென்று கொடுத்தனர்,
Recommended Video

சேவை நிறுத்தம்?
இருப்பினும், இன்றைய தினம் சாலைகளில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதால் ஸ்விக்கி, சொமேட்டோ, ட்ன்சோ போன்ற டெலிவரி சர்வீஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து இதுவரை அந்நிறுவனங்கள் சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து பெய்யும் மழையாலும் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாகவும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. அதேநேரம் சில இடங்களில் உணவை டெலிவரிக்கு எடுத்துச் சென்ற ஸ்விக்கி, டாமினோஸ் ஊழியர்கள் மழை வெள்ளத்தில் சிக்கினர். வெள்ள பாதிப்புகள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு மட்டும் உணவு டெலவரி சேவை தற்போது நடைபெறுகிறது.

எச்சரிக்கை தேவை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் அடுத்து வரும் நாட்களுக்கும் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வரும் வாரங்களில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதனால் டார்ச், மெழுகுவர்த்தி போன்ற பொருட்களை மின்சாரம் தடைப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிப்போர் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

உதவி எண்கள்
முக்கியமான சான்றிதழ்களை, ஆவணங்களை பிளாஸ்டிக் பையில் போட்டு பரண் போன்ற உயரமான இடங்களில் தனியாக வைப்பது மூலம் அவை தண்ணீரில் நனைவதில் இருந்து பாதுகாக்கலாம். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 1913, 04425619206, 04425619207, 04425619208 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications