மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது.. அவதிப்படும் மயிலாப்பூர், மந்தைவெளி பகுதி மக்கள்!
சென்னை: மழை நீருடன் கழிவு நீர் புகுந்து உள்ளதால் மயிலாப்பூர் மந்தைவெளி பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறி உள்ளது. சென்னையில் இன்று தான் மழை இல்லை. நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை விடாமல் பெய்த கனமழை காரணமாக பல பகுதிகளில் மழை நீர் செல்ல வழியில்லாமல் கழிவுநீரில் கலந்தது.
இதனால் சென்னையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் வெள்ள நீரும் கழிவு நீரும் சாலைகளில் தேங்கி உள்ளது. பல பகுதிகளில் வீடுகளுக்கு உள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. மக்கள் வெள்ள நீரை அகற்றினால் மட்டுமே இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்கள்.

மந்தைவெளி
இந்நிலையில் சென்னை முக்கிய பகுதியான மந்தவெளி மயிலாப்பூர் பகுதிகளிலுள்ள சம்பந்தம், தெய்வநாயகம் தெருவில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் மழைநீர் தேங்கியுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மக்கள் அவதி
மின்சாரமின்றி முழங்கால் அளவு வீட்டிற்குள் மழைநீருடன் கழிவுநீர் புகுந்து உள்ளதால் துர்நாற்றம் வீசி வருகிறது. சென்னையில் முக்கிய பகுதியாக உள்ள மயிலாப்பூர் தற்போது அந்த நிலையை இழந்துள்ளது. மழை குறைந்ததும் நீர் குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கழிவு நீருடன் கலந்து தற்போது நீர் வீடுகளுக்குள் புகுந்து வீடுகளை சுற்றிலும் இந்த நிலையே காணப்படுகிறது. 3 நாட்களாக மின்சார வசதியின்றி தவித்து வருவதாக தெரிவித்தனர்.

தொலைப்பேசி எண்
மேலும் இதைக்குறித்து மாநகராட்சி அளித்த இலவச எண்ணிற்கு அழைத்தால் எந்தவித பதிலும் வரவில்லை. பலமுறை அழைத்தும் யாரும் வந்து எங்களுக்கு உதவவில்லை, இந்தப் பகுதியில் பெரும்பாலும் முதியவர்கள் உள்ளனர் துர்நாற்றத்துடன் சுகாதாரம் இல்லாமல் இங்கு எங்களால் இருக்க முடியவில்லை என தெரிவித்தனர்.

மக்கள் வேதனை
அரசின் சார்பாகவும் மாநகராட்சி சார்பாகவும் எந்த அரசியல் கட்சி சார்பாக எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. தொடர்ந்து புகார்களை அளித்தும் சரியான பதிலும் சரியான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications