சென்னை திருவேற்காடு ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க முடிவு.. பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னையை அடுத்த திருவேற்காட்டில் 169 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோலடி ஏரியில் பலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஏரியின் பரப்பளவு 169 ஏக்கரில் இருந்து 112 ஏக்கராக குறைந்துவிட்டது. இதன் காரணமாக ஏரியில் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்கனவே ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றவும் அரசு முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை உள்ளே விடாமல் தடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையின் புறநகர் பகுதியான திருவேற்காடு நகராட்சியில் கோலடி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 169 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆனால் இந்த ஏரி ஆக்கிரமிப்பு காரணமாக 112 ஏக்கர் அளவுக்கு சுருங்கி காணப்படுகிறது. ஏனெனில் ஏரியின் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்து 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. அதேநேரம் அப்பகுதி மக்களே ஆக்கிரமிப்பை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

எனினும் வெள்ள பாதிப்பை தடுக்க ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற பூந்தமல்லி வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள் இதற்காக நேற்று முன்தினம் ஏரியில் ஆய்வு செய்தனர். அப்போது புதிதாக ஏரியை ஆக்கிரமித்து 25 கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதை கண்டுபிடித்தனர்.அங்கு கட்டுமான பணிகள் நடந்து வரும் 7 கட்டிடங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அதிரடியாக இடித்து அகற்றினர். வருவாய்த்துறை அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று கோலடி ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிப்பதற்காக வருவாய்த்துறையினர் ஜேசிபியுடன் வந்தனர். இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரை அந்த பகுதிக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது வருவாய்த்துறையினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரை கண்டித்து அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களை இங்கிருந்து வெளியேற்றக்கூடாது என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினார்கள்.
இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது புதிதாக கட்டப்பட்டுள்ள 20 கட்டிடங்களை மட்டும் இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றார்கள். அதன்பின்னர் ஏரியை ஆக்கிரமித்து புதிதாக கட்டிய கட்டிடங்களை இடிக்கும் பணியில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் தாங்கள் குடியிருக்கும் வீடுகளையும் அதிகாரிகள் இடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக புதிதாக கட்டுமான பணி நடந்து வரும் வீடுகள், கட்டி முடிக்கப்பட்டு ஆட்கள் குடியேறாமல் இருக்கும் வீடுகளை மட்டும் வருவாய் துறை அதிகாரிகள் இடித்து அகற்றி உள்ளார்கள். அதேநேரம் அந்த ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள் கணக்கீடு செய்யப்பட்டு முறையாக நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதன்பிறகு ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினார்கள்.















Click it and Unblock the Notifications