திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலித்த ரிப்பன் மாளிகை.. என்ன காரணம் தெரியுமா??
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை நேற்றைய தினம் இளஞ்சிவப்பு ஒளிவெள்ளத்தில் ஒளிரூட்டப்பட்டது.
சிங்கார சென்னை 2.0இல் எழில்மிகு சென்னை திட்டத்தின் கீழ், ரிப்பன் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.75 கோடியில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தினம், குடியரசு தினம் மட்டுமின்றி மற்ற சிறப்பு நாட்களிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதை ஒளிரூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அடையாறு மற்றும் காந்தி மண்டபம் மேம்பாலங்கள், சைதாப்பேட்டை அரங்கநாதன் வாகன சுரங்கப்பாதை ஆகியவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ரூ. 60 லட்சம் செலவில் இவை அலங்கரிக்கப்பட்டுள்ள நிலையில், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் அதற்கேற்ப வண்ணங்களில் இந்த பாலங்கள் ஒளிரூட்டப்படும்.

சிங்கார சென்னை 2.o
இது மட்டுமின்றி மின்ட் சந்திப்பில் உள்ள வள்ளலார் நகர், டவுட்டன் சந்திப்பு, காரன் ஸ்மித் சாலை சந்திப்பு என நகரின் உள்ள பல முக்கிய மேம்பாலங்களிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முக்கிய நாட்களில் குறிப்பிட்ட வண்ணங்களில் இந்த பாலங்கள் ஒளிரூட்டப்பட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகை
அதன்படி சென்னை பெருநகர மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை நேற்றைய தினம் இளஞ்சிவப்பு ஒளிவெள்ளத்தில் ஒளிரூட்டப்பட்டது. மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரிப்பன் மாளிகை நேற்றைய தினம் இளஞ்சிவப்பு ஒளிவெள்ளத்தில் ஒளிரூட்டப்பட்டது. புற்றுநோய் சிகிச்சை தொடர்பு மையம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்பக புற்றுநோய்
முன்னதாக இது குறித்து தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறுகையில், கடந்த 2020இல் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பலியாகியுள்ளனர். அதில் 6.85 லட்சம் பேர் மார்பக புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். நான்கு நிமிடத்திற்கு ஒரு இந்தியர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். தொடக்கத்திலேயே இந்த மார்பக புற்றுநோயைக் கண்டறிந்தால் அதை எளிதாகக் குணப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications