ரவுடி பற்றி கிடைத்த ரகசிய தகவல்.. காதுகுத்து ரவியை துப்பாக்கி முனையில் தட்டித் தூக்கிய போலீசார்!
சென்னை: சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி காதுகுத்து ரவியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். பதுங்கி இருந்த காதுகுத்து ரவியை துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளது தனிப்படை போலீஸ்.
வடசென்னையைச் சேர்ந்த ரவுடி காதுகுத்து ரவி மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்பட பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன.

காதுகுத்து ரவி
சென்னையை கலக்கி வந்தவர் பிரபல ரவுடி ரவி என்ற காதுகுத்து ரவி (56). 1991 ஆம் ஆண்டு முதல் 5 கொலை, 5 கொலை முயற்சி உட்பட 22-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இவர் மீது உள்ளன. வட சென்னை ஏரியாவை கலக்கி வந்த இவர் A+ கேட்டகிரி ரவுடியாக இருந்து வந்தார்.
அக்கரை பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கொலை வழக்கில் சிறைக்கு சென்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு காதுகுத்து ரவியை நீலாங்கரை மற்றும் சென்னை போலீசார் தேடி வந்தனர்.
ரகசிய தகவல்
இந்நிலையில், நீலாங்கரை போலீசார் வழக்கம்போல் நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் தங்கி உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நீலாங்கரை போலீஸார் சம்பந்தப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்த போது, அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓட முயன்றுள்ளார்.
துப்பாக்கி முனையில் கைது
போதைப் பொருள் பறிமுதல்: இதையடுத்து, அவரை போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், பிடிபட்டது பிரபல ரவுடியான காதுகுத்து ரவி என்பது தெரிந்தது. முன்னதாக, அவரது அறையை சோதனை செய்த போது, அங்கு மெத்தபெட்டமைன் வகை போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போதைப் பொருள் வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ரவுடி காதுகுத்து ரவிக்கு மெத்தபெட்டமின் போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications