கோவிட்-19 நிவாரண நிதியாக "சென்னையின் சகோதரி" சான் ஆண்டோனியோ 10,000 டாலர் நன்கொடை
சென்னை: கோவிட்-19 பாதிப்புக்கு உதவும் வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரம் சென்னை நகரத்துக்கு பத்தாயிரம் டாலர் நன்கொடை வழங்கி உள்ளது.
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " ஜூன் 1: கோவிட்-19 பாதிப்புக்கு உதவும் வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் ஆண்டோனியோ நகரம் சென்னை நகரத்துக்கு பத்தாயிரம் டாலர் ( நன்கொடை வழங்கி உள்ளது. சான் ஆண்டானியோ ரோட்டரி சங்க உறுப்பினர்கள், சென்னை-கிழக்கு ரோட்டரி சங்கத்துக்கு இந்த நெருக்கடியான நேரத்தில், சென்னையின் சகோதரி நகரத்தின் உதவியாக 5,000 டாலர் வழங்கி உள்ளனர். இரு நகரங்களுக்கும் இடையே சகோதரி உறவை வளர்ப்பதற்காக சான் ஆண்டோனியோ நகரத்தில் உருவாக்கப்பட்ட தொண்டு நிறுவனமான அனுஜா எஸ்.ஏ. 5,000 டாலர் நன்கொடை வழங்கிட, மொத்த நன்கொடை 10,000 டாலர் ஆகிறது.

அமெரிக்க துணைத் தூதரான ஜுடித் ரேவின் "இந்த அவசியமான நேரத்தில் உலகின் இரு வேறு நகரங்களைச் சேர்ந்தவர்கள் 'சகோதரி நகரம்' திட்டம் வாயிலாக இணைந்து செயல்படுவது அற்புதமானது! உலகளாவிய பெருந்தொற்று ஒரு நிச்சயமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ள இந்த நேரத்தில் நாமெல்லோரும் இணைந்திருப்போம் என நமக்கு நினைவூட்டுகிறது" என குறிப்பிட்டார்.
சென்னை நகரத்துக்கு அளிக்கப்பட்ட உதவி குறித்து, சான் ஆண்டோனியோ நகர மேயர் ரான் நிரன்பெர்க் அளித்துள்ள செய்தியில், கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய பெருந்தொற்றை எதிர்த்து நாம் இணைந்து போராடினோம். தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு சான் ஆண்டோனியோ ஆதரவாக. நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னலம் கருதாமல் சேவை புரியும் சுகாதாரத் துறையினர், தன்னார்வலர்கள், நண்பர்கள் குறித்த மனிதநேயம் மிக்க உண்மைக்கதைகளை நாங்கள் கேள்விப்படுகிறோம். பல மனித உயிர்கள் பலியானபோதிலும், உங்களுடைய ஈடுபாட்டும், அர்ப்பணிப்பும் எங்களை நெகிழச்செய்கின்றன. அர்ப்பணிப்பு மட்டுமே நம்மை இந்த சோதனையான கட்டத்திலிருந்து மீட்கும். சான் ஆன்டோனியோ-சென்னை நகரங்களுக்கு இடையிலான உறவு ஆழமானது. கோவிட்-19க்கு எதிரான போரில் நாம் இணைந்து செயல்படுவோம்" என்று கூறியுள்ளார்.
சான் ஆன்டோனியோ நகர மேயர் ரான் நிரன்பெர்க், சான் ஆன்டோனியோ நகர ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஸ்டீவ் டார்லிங் ஆகியோரது சுருக்கமான காணொலி உரைகளை துணைத் தூதரகத்தின் சமூக வலை தளப் பக்கத்தில் காணலாம்.
வணிகம், முதலீடு, கலாசாரம் ஆகியவற்றில் ஒத்துழைப்பினை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2008ல் சென்னை, சான் ஆண்டோனியோ ஆகிய இரு நகரங்களும் சர்வதேச சகோதரி நகர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய பண்டிகையான தீபாவளி சான் ஆண்டோனியோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பின்னணி: இரண்டாம் உலகப்போருக்கு சிறிது காலம் கழித்து, அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனோவர், அமெரிக்காவின் நகரங்கள், ஊர்கள், மாநிலங்களுக்கும் உலகின் பிற நாட்டு நகரங்களுக்கும் இடையில் பொருளாதார, கலாசார, தொழில்நுட்ப பறிமாற்றங்கள் செய்துகொள்வதற்காக "சர்வதேச சகோதரி நகரங்கள்" திட்டத்தைத் துவக்கினார். சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களையும், அவர்கள் இணைந்த குழுக்களையும் ஒருங்கிணைத்து, உலகளாவிய சமூக பங்கேற்பு மற்றும் தன்னார்வத் தொண்டு மூலமாக உறவுகளை பலப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதன் பலனாக 140 நாடுகளைச் சேர்ந்த 500 சமூகங்களில் இருக்கும் குடிமக்கள் தூதுவர்களையும், தன்னார்வலர்களையும் 2,000 பங்கேற்பாளர்களோடு சர்வதேச சகோதரி நகரங்கள் திட்டம் இணைக்கிறது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications