சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா.. பொங்கல் நாளில் ஆட்டம், பாட்டம்.. அதிரப்போகும் தலைநகர்
சென்னை: சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற கலை விழா ஜனவரி 13ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. ஜனவரி 14 முதல் 17வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் ஆட்டம் பாட்டம் என தலைநகரம் அதிரப்போகிறது.
திமுக ஆட்சியின் போது கடந்த 2007ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் விழாவின் போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த பின் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையின் போது சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைந்த பிறகு மீண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த அறிவிப்பு வெளியானது.
கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்த பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் 5 நாட்கள் நடைபெற்றன. சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் – மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் (தெற்கு) முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, ராயபுரம் – ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை – மாநகராட்சி விளையாட்டு மைதானம், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – இராமகிருஷ்ணா நகர் விளையாட்டு மைதானம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த ஆண்டும் வரும் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2023-2024-ஆம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையின் போது, சென்னையில் அனைத்து தரப்பு மக்களின் மகத்தான வரவேற்பினைப் பெற்ற சென்னை சங்கமம் கலை விழா, மேலும் எட்டு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சென்னையோடு சேர்த்து, காஞ்சிபுரம், வேலூர், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவினை நடத்திட ரூ.9.90 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணையின் அடிப்படையில் முதற்கட்டமாக சென்னையில், சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா என்ற பிரமாண்ட கலைவிழா ஜனவரி 13 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 14 முதல் ஜனவரி 17 வரை சென்னையின் 18 இடங்களில் கலை விழாக்கள் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஒருங்கிணைப்பு துறைகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஜனவரி 2ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்டது. 18 இடங்களில் நடைபெற இருக்கும் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் 1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்ளவார்கள்.
இவ்விழாவினை சிறப்பான வகையில் செயல்படுத்திட தேவையான ஒத்துழைப்பினை அனைத்து துறைகளும் வழங்கிட வேண்டும் எனவும், ஒவ்வொரு துறைக்கும் வரையறை செய்யப்பட்ட பணிகளை பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடர்பான அனைத்து பணிகளையும் சரியான முறையில் திட்டமிட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.பெருநகர சென்னை வாழ் பொதுமக்கள் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், பண்பாட்டினையும் வெளியிடப்படுத்தும் நமது நாட்டுப்புறக் கலை வடிவங்களை கண்டு களிக்க ஏதுவாகவும், நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்பெறும் பொருட்டும் இவ்விழா சென்னையில் ஜனவரி13 முதல் ஜனவரி 17 வரை நடத்தப்படவுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் காகர்லா உஷா, கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி, மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, தீயணைப்புத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்துத்துறை, தமிழ்நாடு கேபிள் டிவி கார்பரேஷன், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழகம், மின்சாரத்துறை, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியம் போன்ற 16 அரசு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications