சென்னை கான்கிரீட் காட்டிற்கு நடுவே பூக்க போகும் அதிசயம்! இனி வெப்பமே ஏறாது பாருங்க.. அசத்தல் பிளான்!
சென்னை: சென்னையில் தொடர்ச்சியாக பல்வேறு நிறுவனங்களும் முதலீடு செய்து வருகின்றன. முதலீடு நல்ல விஷயம் தான் என்றாலும் இதனால் சென்னையின் இயற்கை வளம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதைச் சரி செய்யத் தமிழ்நாடு அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இப்போது சென்னையின் புறநகர்ப் பகுதியான சிறுசேரிக்கு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற காட்டை உருவாக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இந்தியாவிலேயே மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்தும் கூட சென்னையில் முதலீடுகள் குவிந்தே வருகிறது.

சென்னை: இதனால் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் சென்னையில் படுவேகமாக நடந்துள்ளது.. இதன் காரணமாகச் சென்னை பல மடங்கு பெரிதாக வளர்ந்து இருக்கிறது என்ற போதிலும் இதனால் சென்னையின் இயற்கையும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்களே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கோடை காலத்தில் வெப்பம் புதிய உச்சம் தொட இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கிடையே சென்னையின் புறநகர்ப் பகுதியான சிறுசேரிக்கு அருகே 50 ஏக்கர் பரப்பளவில் Urban forest எனப்படும் நகர்ப்புற காடுகளை உருவாக்கத் தமிழ்நாடு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கான்கிரீட் காட்டுக்கு நடுவே: ஐடி நிறுவனங்களின் வருகையால் கான்கிரீட் காடாக உருவெடுத்துள்ள சிறுசேரிக்கு நிச்சயம் இது மிக முக்கிய தேவையான ஒன்றாகவே இருக்கும். சிறுசேரியில் சிப்காட் அருகிலேயே இந்த நகர்ப்புற காடுகளை உருவாக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் இப்போது விடுக்கப்பட்டுள்ளது. சிஎம்டிஏ நிதியின் கீழ் வனத்துறை மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், "முதலில் அப்பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். மேலும், அங்கு வந்து செல்ல வசதியாக பெஞ்சுகள், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்படும். இத்திட்டம் முடிந்ததும், பொதுமக்கள் இந்த இடத்திற்கு வாக்கிங், ஜாக்கிங் ஆகியவற்றுக்கு செல்லலாம்" என்கிறார்கள்.
எங்கே: சிறுசேரி அருகே ஏற்கனவே வனப்பகுதி இருந்தது. அங்கு ஐடி நிறுவனங்கள் பெரியளவில் முதலீடு செய்த நிலையில், இதனால் வனப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 50 ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதியில் ரூ.5 கோடி செலவில் இந்த நகர்ப்புற காடு உருவாக்கப்படும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் இதை மேற்கொள்ளும். தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஏன் முக்கியம்: இந்தியாவின் வன ஆய்வு அறிக்கை 2021இன் படி, சென்னையில் 5.3 சதவீதம் மட்டுமே காடு உள்ளது. மரங்கள் நிறைந்த வனப்பகுதிகள் இந்தளவுக்குக் குறைவாக இருப்பதும் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டே இங்கு நகர்ப்புற காடு ஒன்றை உருவாக்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த நகர்ப்புற காட்டை உருவாக்கும் பணி முழுமையாக முடியும் எனத் தெரிகிறது. நகரில் பசுமை பகுதிகளை மீட்டெடுக்க மேலும் பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications