சென்னையில் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு.. அம்மாவுக்காக சிறுவன் செய்த செயல்! சோகத்தில் குன்றத்தூர்
சென்னை: சென்னை போன்ற பெரு நகரங்களில் பாம்புகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய்தான் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சென்னை குன்றத்தூரில் நடந்திருக்கிறது.
இந்த உலகில் மனிதர்கள் உருவாவதற்கு முன்பு இருந்தே பாம்புகள் வாழ்ந்து வருகின்றன. டைனோசர் காலத்திலிருந்து பாம்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நேற்று பெய்த மழையில் முளைத்த மனிதர்கள், பாம்புகளை எங்கு பார்த்தாலும் அடித்து கொன்று வருகிறோம்.

பாம்புகளும் மனிதர்களும்
உலகம் முழுவதும் 3,900க்கும் அதிகமான பாம்பு இனங்கள் இருக்கின்றன. இதில், இந்தியாவில் மட்டும் 300க்கும் அதிகமான இனங்கள் இருக்கின்றன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இவ்வளவு இனங்களில் வெறும் 60 மட்டும்தான் விஷம் கொண்டவை. இந்த 60ல் வெறும் 4 இனங்கள்தான் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அதாவது பெரும்பாலான உயிரிழப்புகள் இந்த 4 பாம்புகளால்தான் ஏற்படுகிறது. மற்ற விஷ பாம்புகள் அடர்ந்த காடுகளிலும், கடல் பகுதிகளிலும் இருக்கின்றன.
- நல்ல பாம்பு/நாகப்பாம்பு
- கண்ணாடி விரியன்
- கட்டு விரியன்
- சுருட்டை விரியன்
விஷம் கொண்ட பாம்புகள்
இந்த 4 பாம்புகளில், ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொரு மாதிரியான விஷம் கொண்டிருக்கும். தலைக்கு பின்னால் U வடிவம் போடப்பட்டிருந்தால் அது நல்ல பாம்பு என்று அர்த்தம். இந்த பாம்புகள் கடித்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும். அதேபோல கட்டு விரியன் பாம்புகளின் விஷமும் நரம்பு மண்டலத்தைதான் தாக்கும். இந்த பாம்புகள் இரவில்தான் அதிகம் நடமாடும். கடித்துவிட்டால் கடித்த இடம் தெரியாது. எறும்பு கடித்ததை போல இருக்கும். சரியாக கவனிக்கவில்லை எனில் இடுகாட்டில் இடம் கன்பார்ம்.
எந்த பாம்பு ஆபத்து?
கண்ணாடிவிரியன் மற்றும் சுருட்டை விரியன் இரண்டும் ரத்த ஓட்ட மண்டலத்தை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். கண்ணாடி விரியன் மலை பாம்பு குட்டி போல இருக்கும். பக்கத்தில் போனால், கடித்து விஷயத்தை செலுத்திவிடும். அதேபோல சுருட்டை விரியன் பாம்பும் ஆபத்தானது. வயல்வெளிகளில் இதை அதிகமாக பார்க்க முடியும். எனவேதான் விவசாயிகள் அடர்ந்த பகுதிகளுக்கு செல்லும்போது கையில் ஒரு கம்பை எடுத்து செல்கிறார்கள். இருந்தாலும் பாம்பு கடியால் தொடர்ந்து மரணம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.
சென்னையில் சம்பவம்
அப்படித்தான் சென்னை குன்றத்தூரிலும் பாம்பு கடி சம்பவம் பதிவாகியிருக்கிறது. குன்றத்தூர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. இவருக்கு அபிஷேக் என்கிற 9 வயது மகன் இருக்கிறான். இந்த சிறுவன் அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அபிஷேக்கின் தாய் வீட்டின் பின்புறம் வெந்நீர் காய வைத்திருக்கிறார். அம்மாவுக்கு உதவ, அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகு கட்டையை எடுத்திருக்கிறான் அபிஷேக்.
உடலில் பரவிய விஷம்
அந்த நேரத்தில் எதிர்பாராமல் நல்ல பாம்பு ஒன்று சீறி அபிஷேக்கை கடித்திருக்கிறது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்றிருக்கின்றனர். பாம்புகள் கடித்தால் உடனே பதற்றமடைய கூடாது. இது உடல் முழுவதும் விஷத்தை பரப்பிவிடும். ஆனால் சிறுவன் அதிகம் பதற்றமடைந்ததால், விஷயம் வேகமாக பரவியிருக்கிறது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர்.
ஆனால் எவ்வளவுதான் முயன்றும் சிறுவனின் உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. நேற்று முன்தினம் இரவு சிறுவன் உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவம் தொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குன்றத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications