பீர் குடிப்பதில் போட்டி.. களத்தில் இறங்கிய புஷ்பா! 19வது ரவுண்டில்.. தலைகீழாக மாறிய நிலைமை!
சென்னை: பொங்கல் விடுமுறையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சில போட்டிகள் விபரீதமாகவும் முடிந்தது. இந்நிலையில் இளைஞர்கள் இருவர் சேர்ந்து.. யார் அதிக பாட்டில் பீரை குடிப்பது என்று போட்டி போட்டுக்கொண்டு குடித்திருக்கிறார்கள். இந்த போட்டி சோகத்தில் முடிந்திருக்கிறது.
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம், கே.வி.பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பண்டவடிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் சென்னையில் சாஃப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வந்திருந்தார். பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற இவர், மணிகுமார், ஷ்ரவண், வேணு, சிவமணி, அபிஷேக் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு அடித்திருக்கிறார்.

திடீர் உடல்நலக்குறைவு
மது அருந்தியபோது, புஷ்பராஜ் மற்றும் மணிகுமார் என இருவருக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சக நண்பர்கள் இவர்கள் இருவரையும் மீட்டு, கர்ணமிட்டா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மணிகுமார் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். புஷ்பராஜ் பீலேரில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இரு இளைஞர்களின் மரணம் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்தையடுத்து கல்கடா காவல் ஆய்வாளர் லட்சுமண்ணா தலைமையிலான போலீஸ், மற்றும் கலால் துறை அதிகாரிகள் மது அருந்திய இடத்தை தீவிரமாக ஆய்வு செய்தனர். உயிரிழந்தவர்களுடன் சேர்ந்து மது அருந்தியவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் சொல்வது என்ன?
உயிரிழந்த மணிகுமாருக்கு, நாகசிவராணி என்ற மனைவியும், ஒன்றரை வயது மகனும் உள்ளனர். புஷ்பராஜ் எம்.பி.ஏ. படித்தவர், அவரது தந்தை கோவிந்து சில ஆண்டுகளுக்கு முன் சாலை விபத்தில் இறந்த நிலையில், அவரது மறைவு தாய் சரோஜாவின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து, அன்னமய்யா மாவட்ட டிஎஸ்பி எம்.ஆர். கிருஷ்ணமோகன் கூறுகையில்,
அளவுக்கு அதிகமான மது
"இந்த மரணங்கள் அளவுக்கு அதிகமான மது அருந்தியதாலேயே ஏற்பட்டிருக்கிறது. மணிகுமாரும், புஷ்பராஜும், நான்கு உறவினர்களுடன் கர்ணமிட்டாவில் உள்ள மதுபானக் கடையில் இருந்து 19 'பட்வைசர் டின் பீர்களை' வாங்கி, சனிக்கிழமை மதியம் முதல் மாலை வரை மலைப்பகுதியில் அருந்தியுள்ளனர். மணிகுமாரின் தந்தை ஆவலுக்குண்டா நரசிம்முலுவின் புகாரின் பேரில், சந்தேகத்திற்குரிய மரணங்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீலேர் கலால் துறை, முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகிறது. குடித்த காலி பீர் டின்னுகளும், மீதமிருந்த உணவுப் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில் விசாரணை தொடரும்" என கூறியுள்ளார்.
கிராம மக்கள் சந்தேகம்
இருப்பினும், இந்த மரணங்கள் போலி மதுபானத்தால் ஏற்பட்டதா என்ற சந்தேகம் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எக்சைஸ் துறையினர் பொதுவாக இரண்டு அல்லது மூன்று பீர் குடிப்பது இயல்பானது எனக் குறிப்பிட்டாலும், ஆறு பேர் சேர்ந்து 19 டின் பீர் அருந்தியது (தலா இரண்டு பீர் பாட்டில்கள்), உயிரிழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அதிக நுகர்வு அல்ல என்பதே கிராம மக்களின் வாதம்.
பீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் என்ன ஆகும்?
ஒரே நேரத்தில் அதிக அளவில் மதுவை குடிப்பது 'பிஞ்ச் டிரிங்கிங்' எனப்படும். இப்படி குடிப்பதால், ரத்தத்தில் மதுவின் அளவு அதிகரித்து மூளை செயலிழக்க தொடங்கும். இதனால் மூளை நுரையீரலுக்கு சிக்னலை அனுப்பாது. இதனால், சுவாச பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக மரணம் ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications