சென்னைக்கும் வருது கோவாக்சின் சோதனை.. எஸ்ஆர்எம் மருத்துவமனையில்.. எந்தக் கட்டத்தில் உள்ளது?
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் பரிசோதனை செய்ய எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நாட்டின் பல்வேறு மருத்துவமனைகள் இதற்கான பரிசோதனையில் இறங்கியுள்ள நிலையில் எஸ்ஆர்எம் மருத்துவமனை பரிசோதனை செய்வதற்கான தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவமனைகளில் தமிழகத்தில் இருக்கும் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் ஒன்று. தமிழகத்தில் இந்த மருத்துவக் கல்லூரிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், புனேவில் இருக்கும் வைராலாஜி மையம், ஐதராபாத்தில் இருக்கும் பாரத் பயோடெக் ஆகியவை இணைந்து இந்த மருந்தை தயாரித்துள்ளன. இதற்கு கோவாக்சின் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருந்தை மனித பரிசோதனைக்கு உட்படுத்த இந்தியாவில் 12 மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தும் தன்னார்வலர்களை தேர்வு செய்து பரிசோதித்து வருகிறது.
இதுகுறித்து அந்த மருத்துவமனை அளித்து இருக்கும் பேட்டியில், ''பரிசோதனைக்கு தயாராக இருப்பதாக எங்களுக்கு தொலைபேசி மற்றும் மெயில் மூலம் பல தன்னார்வலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு வரவழைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறோம். பரிசோதனைக்கு உடல்வாகு தகுதி இருப்பவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுவார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிவியாவில் பயங்கரம்.. கொரோனா சமூகப் பரவலின் கோரம்.. வீடுகள், தெருக்களில் கிடந்த 400 சடலங்கள்!
இந்த பரிசோதனைக்கு 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அதுவும் வேறு எந்த நோய் உபாதைகளும், கொரோனா தொற்றும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் கட்ட பரிசோதனைக்கு 375 தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களில் 40 முதல் 50 பேர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இருந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கடந்த திங்கள் கிழமையில் இருந்து டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ், ஐதராபாத்தில் இருக்கும் நிசாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ரோதக்கில் இருக்கும் பிஜிஐஎம்எஸ் ஆகிய மருத்துவமனைகளில் பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. SARS-CoV-2 என்ற மருந்தில் இருந்து கோவாக்சின் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.