சென்னை புறநகர் ஏ.சி. ரயில்கள் தந்த ஹேப்பி.. பயணிகள் செம வரவேற்பு.. தெற்கு ரயில்வே மகிழ்ச்சி தகவல்
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டு, அது செயல்படுத்தப்பட்டும் வருகிறது.. இந்நிலையில், தெற்கு ரயில்வே சென்னையில் ஏ.சி., புறநகர் ரயில்களுக்கு நாளுக்கு நாள் மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது.
சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள், இன்றைய சூழலில் பயணிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.. எனவேதான் பயணிகளின் கூடுதல் வசதியை கருத்தில் கொண்டு சென்னை - தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 240 க்கும் மேற்பட்ட சேவைகள் இரு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

எனினும், சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி வசதி இல்லை என்பதால், ஏசி வசதியுடன் கூடிய ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.. அதன்படியே, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிய ஏசி மின்சார ரயில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ரயில்கட்டணம், நேரம்
ஆனால், இந்த ரயில் கட்டணம் மற்றும் ரயில் இயக்கப்படும் நேரம் ஆகியவை பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் இல்லை என்று மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.. இதனையும் தெற்கு ரயில்வே ஏற்று, நேரத்தை மாற்றியமைத்தது..
அந்தவகையில், கோடை காலத்தில் அதுவும் கடந்த ஏப்ரல் மாதத்தில், ஏசி மின்சார ரயில்களை பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளதுடன், அதன் சேவையின் நேரத்தையும் பயணிகளுக்காகவே ரயில்வே மாற்றியமைத்தது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.
ஏசி புறநகர் ரயில்கள்
இந்நிலையில், சென்னையில் ஏசி புறநகர் ரயில்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருவதாக தெற்கு ரயில்வே மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கிறது.. ஏனென்றால், சென்னையில் கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு குளிர்சாதன வசதியுடைய புறநகர் ரயில் சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பமானது..
இந்த 2 மாதத்திலேயே. பயணிகளின் நன்மதிப்பையும், வரவேற்பையும் இந்த ஏசி ரயில் பெற்றிருப்பதாக தெற்கு ரயில்வே இன்று தெரிவித்துள்ளது.. இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ளதாவது:
கூடுதல் ரயில்கள்
"ஏப்ரலில் 1,488-ஆக இருந்த தினசரி சராசரி பயணிகள் எண்ணிக்கை, மே மாதத்தில் 2,571 ஆகவும், ஜூன் மாதத்தில் 2,800-ஆக உயர்ந்துள்ளது.
அலுவலகம் செல்வோர், தொழிலதிபர்கள், பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் மற்றும் பலருக்கும் பெரும் பயன்தரக்கூடிய வசதி கிடைத்துள்ளது. தற்போது மொத்தம் 8 ஏ.சி., புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் தேவையின் கருதி கூடுதல் ரயில்கள் இயக்கவும் திட்டங்கள் உள்ளன" என தெரிவித்துள்ளது.
21 சிறப்பு ரயில்கள்
இதனிடையே, பராமரிப்பு பணிகள் காரணமாக, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் 39 புறநகா் மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.. எனினும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் உள்ளதாவது:
"சென்னை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) காலை 9.15 முதல் பிற்பகல் 3.15 வரை நடைபெறவுள்ளன.
முழுமையாக ரத்து
இதன் காரணமாக, பணிகள் நடைபெறும் நேரங்களில் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூா்பேட்டை இடையே இயங்கும் அனைத்து புறநகா் மின்சார ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
மேலும், கடற்கரை - கும்மிடிப்பூண்டி, சூலூா் பேட்டை - நெல்லூா், சென்ட்ரல் - சூலூா்பேட்டை உள்பட மொத்தம் 39 புறநகா் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிறப்பு ரெயில்கள்: இருப்பினும் பயணிகளின் வசதிக்காக அந்நாளில் காலை 6.50 முதல் மாலை 5.12 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூா், எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் இடையே மொத்தம் 21 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications