Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையின் நரம்பு மண்டலத்தை சீர்குலைத்த ரயில்வே! கோழைத்தனத்திற்கு பொறுப்பேற்கனும் - சு.வெங்கடேசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூ.2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால், புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், ரூ. 734 கோடியில் புனரமைக்கபடும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்க விட்டுள்ளது தெற்கு இரயில்வே என சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் விமர்சித்திருக்கிறார்.

சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்க செய்திருக்கும் இந்த நிர்வாக கோழைத்தனத்திற்கு இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Chennai Suburban Train Crisis

நிர்வாக குறைபாடுகள்தான் காரணம்

இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "கடற்கரை - செங்கல்பட்டு ரயில் சேவை குறைப்பால் பயணிகள் அவதி
தெற்கு ரயில்வேயின் நிர்வாக அட்சியமே காரணம்.

கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான வழித்தடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடியான இரயில் சேவைக் குறைப்பு மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கியுள்ளது. தினசரி இயக்கப்பட்டு வந்த 204 புறநகர் இரயில் சேவைகள் 115 ஆக, அதாவது 436 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. தெற்கு இரயில்வே தரப்பில் நிர்வாகக் காரணங்களுக்காக மற்றும் எழும்பூர் நிலைய மறுசீரமைப்புப் பணிகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் திட்டமிடலில் இருந்த நிர்வாக குறைபாடுகளே முக்கியக் காரனமாக இருக்கிறது.

43% இரயில்கள் குறைப்பு

தெற்கு இரயில்வேயின் சென்னைக் கோட்டம், எழும்பூர் இரயில் நிலையத்தை மறுசீரமைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5, 2026 வரை 45 நாட்களுக்கு ஒரு பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது. தொடக்கத்தில் 20% ரயில்கள் மட்டுமே ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சமிக்ஞை மாற்றங்கள் காரணமாக இவ்வெண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 43% இரயில்கள் குறைக்கப்பட்டுள்ளன.

45 நிமிடங்களுக்கு ஒரு ரயில்

இது இரயில்களின் நேர இடைவெளியை கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு முன்பு 8 நிமிடங்களுக்கு ஒரு இரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடைவெளி 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை அதிகரித்துள்ளது. இது நிலையங்களில் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் போகக் காரணமாகியுள்ளது. சென்னை இரயில்வே வரலாற்றில் இத்தகைய மோசமான நீண்டகால சேவைக்குறைப்பு மற்றும் பயணிகள் பாதிப்பு இதற்கு முன்பு நடந்ததே இல்லை.

சென்னை இரயில்வே வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை

மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள புறநகர் இரயில் அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, சென்னை எழும்பூர் பணிகளில் திட்டமிடல் இடைவெளி தெளிவாகத் தெரிகிறது. மும்பை சி.எஸ்.எம்.டி (CSMT) மறுசீரமைப்பு - 2026 சென்னை எழும்பூரைப் போலவே மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையத்திலும் (CSMT) 2,450 கோடி ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்புப் பணிகள் பிப்ரவரி 2026-ல் தொடங்கப்பட்டன.

தெளிவான திட்டமிடல்

இதற்காக 85 நாட்கள் மெகா பிளாக் (Mega Block) அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், மும்பை இரயில்வே நிர்வாகம் ஒரு முக்கியமான உத்தியைக் கையாண்டது. கட்டுமானப் பணிகள் நடைபெறும் 16 மற்றும் 17-வது நடைமேடைகள் புறநகர் இரயில் பாதைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இதனால், மும்பையின் புறநகர் இரயில் சேவைகள் (Local Trains) எந்தவிதப் பெரிய பாதிப்புமின்றி வழக்கம்போல இயக்கப்பட்டன. எக்ஸ்பிரஸ் இரயில்கள் மட்டுமே சில நிலையங்களுக்கு முன்பாகவே (Dadar, Thane) நிறுத்தப்பட்டன.

எழும்பூர் நிலைத்தின் நிலைமை

கொல்கத்தா சீல்டா (Sealdah) விரிவாக்கப் பணிகள் - 2024 கொல்கத்தாவில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீல்டா இரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை அனுமதிப்பதற்காக நடைமேடை நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சுமார் 80 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 147 ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ஆனால், இப்பணிகள் ஒரு வார இறுதியில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டுமே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. சென்னை எழும்பூரைப் போல 45 நாட்களுக்குத் தொடர்ச்சியாக சேவைகளைக் குறைக்கும் முறை அங்கு இல்லை.இந்நெருக்கடியை திட்டமிடப்பட்ட நிர்வாக நடைமுறையின் மூலம் தவிர்த்திருக்க முடியும்.

20 ஆண்டுகளாக இழுபறி

எம்.ஆர்.டி.எஸ் (MRTS) இணைப்புப் பணியில் ஏற்பட்ட காலதாமதம் சென்னையின் புறநகர் இரயில் சேவையில் நிலவும் நெருக்கடிக்கு மிக முக்கியக் காரணியாக வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுண்ட் (St. Thomas Mount) இடையிலான எம்.ஆர்.டி.எஸ் விரிவாக்கப் பணித் தாமதம் பார்க்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த 5 கி.மீ தூர இணைப்புப் பணி முடிவடைந்திருந்தால், பயணிகள் கடற்கரை மற்றும் கோட்டை நிலையங்களை அடைய எழும்பூர் வழியாக வரும் தேவையிருக்காது.

எம்.ஆர்.டி.எஸ்

வேளச்சேரி வழியாக நேரடியாக மவுண்ட் நிலையத்திலிருந்து கடற்கரைக்குச் செல்ல முடியும். நிர்வாகம் எழும்பூர் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, இந்த எம்.ஆர்.டி.எஸ் இணைப்பை முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். பிப்ரவரி 2026-ல் எழும்பூர் பணிகள் உச்சத்தில் இருக்கும்போது, எம்.ஆர்.டி.எஸ் இணைப்பு மார்ச் மாதம்தான் முடியும் என்று இரயில்வே தரப்பு ஒப்புக்கொள்வது, பணிகளை ஒருங்கிணைப்பதில் உள்ள பெரிய தோல்வியைக் காட்டுகிறது.

நடைமேடை மேலாண்மை மற்றும் வேகக் கட்டுப்பாடு:

எழும்பூர் இரயில் நிலையத்தில் புறநகர் இரயில்களுக்கென பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட நடைமேடைகள் 10 மற்றும் 11 ஆகும். இவை 55 கி.மீ வேகத்தில் இரயில்களை இயக்கவும், ஒரே நேரத்தில் இரயில்களை அனுப்பவும் பெறவும் கூடிய வசதி கொண்டவை. தற்போது இந்நடைமேடைகள் மூடப்பட்டு, புறநகர் இரயில்கள் எக்ஸ்பிரஸ் இரயில் நடைமேடைகளான 5 மற்றும் 6-க்கு மாற்றப்பட்டுள்ளன.

நிர்வாகத்தின் பலவீனம்

எக்ஸ்பிரஸ் நடைமேடைகளின் சமிக்ஞை மற்றும் வழித்தட அமைப்புகள் (Crossings) புறநகர் இரயில்களுக்குப் பொருத்தமானதாக இல்லை. இதனால் இரயில்கள் நிலையத்திற்குள் நுழையும்போது அதன் வேகம் 15 கி.மீ ஆகக் குறைக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு இயக்கப்பட வேண்டிய இரயில்களின் எண்ணிக்கையை இவ்வேகக் குறைப்பு நேரடியாகப் பாதிக்கிறது. இப்பாதிப்பை முன்கூட்டியே உணர்ந்து, கூடுதல் சமிக்ஞை வசதிகளைச் செய்யத் தவறியது நிர்வாகத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.

மாநில போக்குவரத்து முகமைகள்

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை இல்லாமை ஒரு மிகப்பெரிய இரயில் சேவைக் குறைப்பு அறிவிக்கப்படும்போது, அது சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) ஆகியவற்றுடன் முறையாகக் கலந்தாலோசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு மாநில போக்குவரத்து முகமைகளைத் தயார் நிலையில் இல்லாமல் செய்ததாகத் தெரிகிறது. இரயில்வே விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகுதான் மாநகரப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன, ஆனால், அது இரயில் பயணிகளின் எண்ணிக்கையை ஈடுகட்டப் போதுமானதாக இல்லை.

தாம்பரம்-செங்கல்பட்டு

"தற்காலிக சிரமம், நிரந்தர வசதி" என்று பிரச்சாரம் செய்தாலும், 45 நாட்கள் என்பது ஒரு சாமானியனின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நிதியியல் சுமை புறநகர் இரயில்களில் பயணிக்க 10 ரூபாய் செலவாகும் நிலையில், இரயில்கள் இல்லாததால் ஆட்டோ அல்லது தனியார் டாக்ஸிகளில் பயணிக்க வேண்டிய கட்டாயம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் அல்லது செங்கல்பட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு நாளைக்கு 300 முதல் 400 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது.

மாற்று வழித்தடங்கள்

தினசரி கூலி வேலை செய்பவர்களுக்கு இது பெரும் பொருளாதாரப் பின்னடைவாகும். மாணவர்களின் கல்விப் பாதிப்பு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும். குறிப்பாக, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் நேரத்தில் இரயில் சேவைக் குறைப்பு செய்யப்பட்டிருப்பது மாணவர்களின் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரயில்களின் இடைவெளி அதிகரிப்பு மற்றும் நிலையற்ற நேரங்கள் தேர்வு மையங்களுக்குச் செல்வதில் சிக்கல்களை உருவாக்கியுள்ளன.

திட்டமிடப்படாத நிர்வாக அலட்சியம்

மாற்று வழித்தடங்களின் நிலை புறநகர் இரயில்கள் குறைந்ததால் மெட்ரோ இரயில்களில் (CMRL) பயணிகளின் எண்ணிக்கை சுமார் 20,000 அதிகரித்துள்ளது. இதனால் மெட்ரோ இரயில் நிலையங்களிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுகிறது. அதேபோல ஜி.எஸ்.டி சாலையில் பேருந்துப் போக்குவரத்து அதிகரித்திருப்பதால், அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சிக்கல்கள் அனைத்துக்கும் தெற்கு இரயில்வேயின் திட்டமிடப்படாத நிர்வாக அலட்சியமே முக்கிய காரணம்.

எம்.ஆர்.டி.எஸ் இணைப்பை முடிக்காமல் எழும்பூர் பணிகளைத் தொடங்கியது. 204 இரயில்களில் இருந்து 115 ஆகக் குறைக்கப்பட்டதை முன்கூட்டியே முறையாக அறிவிக்காதது. மாற்றுப் பேருந்து வசதிகள் மற்றும் மெட்ரோ சேவைகளை மாநில அரசுடன் இணைந்து முன்கூட்டியே திட்டமிடத் தவறியது. மும்பை போன்ற நகரங்களில் புறநகர் சேவைகளைப் பாதுகாக்கப் பின்பற்றும் "தனிமைப்படுத்தப்பட்ட நடைமேடை" உத்தியை எழும்பூரில் செயல்படுத்தாதது.

எக்ஸ்பிரஸ் நடைமேடைகளிலும் புறநகர் இரயில்களை 40-50 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய வகையில் சமிக்ஞை அமைப்புகளை (Yard Modernization) முன்கூட்டியே மேம்படுத்தாது.

மக்கள் நலன்

மக்களின் நலனை கருத்தில் கொள்ளாத மமதை ஏறிய நிர்வாக அலட்சியத்தால் சென்னை மக்கள் இந்த பெரும் இன்னலை இன்று சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். ரூ. 2450 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு வரும் மும்பை இரயில்நிலைய பணிகளால் புறநகர் இரயில்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை. கொல்கத்தா சீல்டா நடைமேடை விரிவாக்கப் பணிகளால் சனி, ஞாயிறு இரு நாட்கள் மட்டுமே இரயில்கள் நிறுத்தப்பட்டன.

ஆனால், ரூ. 734 கோடியில் புனரமைக்கப்படும் எழும்பூர் இரயில்நிலைய பணிக்காக 45 நாட்கள் தினசரி 2.5 லட்சம் பயணிகளை தவிக்கவிட்டுளது தெற்கு இரயில்வே. சென்னை பெருநகர இயக்கத்தின் நரம்பு மண்டலத்தையே சீர்குலைக்கச் செய்திருக்கும் இந்நிர்வாகக் கோழைத்தனத்திற்கு ஒன்றிய இரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+