சென்னையில் புறநகர் ரயில் சேவை மொத்தமாக முடங்கியது.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்களால் பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் இன்று முதல் புறநகர் ரயில்கள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் இன்று அதிகாலை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த அளவிலான ரயில்கள் இயக்கப்பட்டாலும், சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.


சென்னை போக்குவரத்தில் மிக முக்கியமானதாக இருப்பது புறநகர் ரயில் சேவைதான். சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் வரையிலும், சூலூர்பேட்டா வரையிலும், மறுபுறம் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம்-செங்கல்பட்டு வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். தென் மாவட்டங்களிலிருந்து வரும் சில ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுவதால் அங்கிருந்து சிட்டிக்குள் வரவும் இந்த புறநகர் ரயில்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன.
இப்படி இருக்கையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக தினமும் 204 முறை எழும்பூர் வழியாக புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு 10-12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக புறநகர் ரயில்கள் நின்று செல்லும் 10 மற்றும் 11வது நடைமேடைக்கு பதிலாக, 5 மற்றும் 6வது நடைமேடைகளில் ரயில்கள் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, 204 முறை ரயில்கள் இயக்கப்படுவதற்கு பதில், 164 முறை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், வெளியூரிலிருந்து வீடு திரும்புவோர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இப்படி இருக்கையில் குறைந்த அளவில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவைகளும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கின்றன. இன்று அதிகாலை முதல் இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிக்னல் கோளாறு காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications