சென்னையில் மழை.. தமிழகத்தில் திடீர்னு பரவுதே.. சுகாதாரத்துறை சொன்ன விஷயத்தை பாருங்க.. கவனம் மக்களே
சென்னை: மழைக்கால காய்ச்சல், நீரினால் பரவக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தியிருக்கிறது.
தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இதனால், மழைக்கால நோய்களாக, காய்ச்சல், சளி பாதிப்புகள் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்கிறார்கள்..

தனியார் மருத்துவமனை: இப்படித்தான், கடந்த செப்டம்பர் மாதமும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் பரவியது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும், சாதாரண நாட்களை விட பலமடங்கு உயர்ந்து காணப்பட்டது.. இதில், புறநகர் பகுதிகளில் பெருங்களத்தூர், தாம்பரம், வண்டலூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழை பெய்து வரும்நிலையில், மீண்டும் காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகமாக உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அட்வைஸ்: காய்ச்சல் பாதிப்பு தெரியவந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியபடியே உள்ளது.
கடந்த வாரம்கூட, பொது சுகாதாரதுறை இயக்குநர் செல்வ விநாயகம் பொதுமக்களுக்கு ஒரு அட்வைஸ் தந்திருந்தார்.. "கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடிக்கும்போது மஞ்சள் காமாலை, டைபாய்டு, எலி காய்ச்சல், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட100-க்கும் மேற்பட்ட வைரஸ் மற்றும்பாக்டீரியா பாதிப்புகள் ஏற்படக்கூடும்.. இதனை தடுக்க வேண்டுமானால் தண்ணீரைக் காய்ச்சிக் குடிப்பது மட்டுமே இதற்கு சிறந்த தீர்வாகும்.
தொற்று பாதிப்பு: பொது விநியோகத்தில் வழங்கப்படும் குடிநீரில், குளோரின் கலந்து விநியோகிக்கப்படுகிறது. ஆனால், குளோரின், பாக்டீரியா தொற்றை மட்டும் அழிக்குமே தவிர, வைரஸ் பாதிப்பை தடுக்காது.
அதனால், குளோரின் கலந்திருந்தாலும், குடிநீரை காய்ச்சி குடிக்கும்போது, பல்வேறு விதமான நோய் பாதிப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்' என்று கூறியிருந்தார். இப்போது மீண்டும், இணை சுகாதார இயக்குநர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளர்.

அதில், "வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் டெங்கு, மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்னும் 2 மாதங்களுக்கு காய்ச்சல்களின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏடிஸ்கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், டெங்கு பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
அறிவுறுத்தல்: பொதுமக்கள், தங்களுக்கு உடல்சோர்வு, காய்ச்சல் போன்ற உபாதைகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல், மருத்துவர்களின் பரிந்துரைப்படி சிகிச்சைபெற வேண்டும். மழைக்கால காய்ச்சல் மற்றும் நீரினால் பரவக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றுஇணை சுகாதார இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications