பிராங்க் ஷோ.. சிக்கிய 200 ஆபாச வீடியோக்கள்.. யூடியூப் சேனல் நடத்தியவர்களுக்கு கிடைக்க போகும் தண்டனை?
சென்னை: பிராங்க் ஷோ என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ எடுத்து சென்னை டாக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 200 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
Recommended Video
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இளம் பெண்கள் மற்றும் காதலர்களை மட்டும் குறிவைத்து யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சிலர் அவர்களிடம் ஏடாகூடமான கேள்விகை கேட்டு ஆபாசமாக பேட்டியை சித்தரித்து அதை யூடியூப்பில் வெளியிடுவார்கள்.
பேசியதை கண்ட இடங்களில் வெட்டி, அதற்கு தகுந்தாற் போல் காமெடி வீடியோக்களை சேர்த்து பேட்டி கொடுத்த பெண்ணையே தவறான பெண் போல் சித்தரிக்கும் அளவுக்கு பிராங்க் ஷோ நடத்தி வருகிறார்கள் சிலர்.
சென்னை டாக்
இந்த மாதிரியான பிராங்க் ஷோ வீடியோக்களுக்கு லைக்குகளும் ஷேர்களும், பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் தாறுமாறாக இருப்பதால் யூடியூப் சேனல் நடத்தும் சிலர் காதலர்களை குறிவைத்து ஆபாசமாக பேட்டி எடுப்பதையே வேலையாக வைதது வந்தனர். அப்படி பேட்டி எடுத்து சர்ச்சையில் சிக்கியவர்கள் தான் சென்னை டாக் யூடியூப் சேனல் உரிமையாளர்கள்.
ஐந்து பிரிவுகள்
இளம் பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்து ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூ-டியூப் சேனல் உரிமையாளர் தினேஷ், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆசின் பாஷா, ஒளிப்பதிவாளர் அஜய் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேர் மீதும் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் ஐபிசி 294 (பி) ஆபாசமாக பேசுதல், 354 (பி), பெண்களை பின் தொடர்ந்து தொந்தரவு செய்தல், ஐபிசி 509 பெண்களை பொது இடங்களில் அவமானம்படுத்தும் வகையில் கேள்விகளை கேட்பது, 506(2) மிரட்டுதல் மற்றும் பெண்களை வன்கொடுமை தடுப்பு சட்டம் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் நிரூபணம்
இந்த ஐந்து சட்டப்பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 3 பேருக்கும் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
பெண்கள் புகார்
சென்னை டாக் சேனல் உரிமையாளர் தினேஷ் உள்பட கைதானவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் யூ-டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு போலீஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீது இவர்களின் பிராங் ஷோவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிகள் ஐடி நிறுவன ஊழியர்கள் என இளம் பெண்கள் புகார் அளித்து வருகிறார்கள்.