3 பேருக்குமே 20 வயதுதான்.. மெரினாவின் ஆழத்தில் விளையாட்டு?.. மாயமானவர்களை தேடும் பணியில் ஹெலிகாப்டர்
மெரினா கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்களை தேடும் பணி நடக்கிறது
சென்னை: மெரினா கடற்கரையில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் அலையில் சிக்கி மாயமாகி உள்ள நிலையில், அவர்களை தேடும் பணி 2வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது...
இதனிடையே அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு கடற்கரை, தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களை திறக்க உத்தரவிட்டது.

தளர்வுகள்
அதன்படி 4 மாதங்களுக்கு பிறகு மெரினா பீச்சும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது.. நேற்று காலை முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், இத்தனை காலமும் வீட்டிலேயே முடங்கி கிடந்த மக்கள் பலரும் மெரினாவை நோக்கி படையெடுத்தனர்.. இதனால், முன்னதாகவே அங்கு போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

மாணவர்கள்
இந்நிலையில் மெரினா கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற சென்னை வேளச்சேரியை சேர்ந்த 3 மாணவர்கள் அலையில் அடித்து செல்லப்பட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.. சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர்... இவரது மகன் சபரிநாதன்... சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

கூச்சல்
இவர் நேற்று, தன்னுடைய நண்பர்கள் விமல், தர்மராஜன், சல்மான், சக்திவேல், ஆகாஷ் ஆகியோருடன் மெரினா பீச்சில் குளிக்க சென்றுள்ளார்.. நண்பர்கள் 6 பேரும் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென கடலில் ஏற்பட்ட ராட்சத அலையில் சபரிநாதன், விமல், தர்மராஜன் 3 பேருமே சிக்கி கொண்டனர்.. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்களும் மற்ற நண்பர்களும் அவர்களை காப்பாற்றுவதற்காக கூச்சலிட்டனர்...

தீயணைப்பு துறை
ஆனால் அவர்கள் 3 பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தரவும் அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அலையில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினரும், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து 2வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...

ஹெலிகாப்டர்
மற்றொரு புறம் ஹெலிகாப்டர் மூலமும் தேடும் பணி நடந்து வருகிறது.. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்... 3 பேருக்குமே சுமார் 20 வயது மட்டுமே இருக்கும்.. குளித்து கொண்டிருந்தவர்கள் திடீரென மிகவும் ஆழத்திற்கு விளையாட சென்றதாலேயே, நீருக்குள் இழுத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications