சென்னை-மும்பை இடையே 130 கிமீ குறையபோகுது.. திருப்பதி சாலையில் மத்திய அரசு சூப்பர் திட்டம்
சென்னை: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர மாநிலத்தின் எல்லை வரை உள்ள இரண்டு வழிச்சாலை,விரைவில் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை சென்னையில் இருந்து மும்பை மற்றும் திருப்பதிக்கு சாலை மார்க்கமாக செல்வதற்கான நேரத்தை கணிசமாக குறைக்கும் என்கிறார்கள். சென்னை-திருப்பதி இடையே உள்ள 144 கி.மீ தேசிய நெடுஞ்சாலை என்பது மும்பை செல்ல முக்கியமான வழிகளில் ஒன்று.

பெங்களூர் வழியாக போகாமல் ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாக போகலாம். இப்படி சென்றால் சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரம் குறைந்தது 120-130 கி.மீ தூரம் குறையும். எனவே தான் சென்னை திருப்பதி இடையே இந்த சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது
ஆனால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை எண் 205 இல் திருவள்ளூரில் இருந்து தமிழ்நாடு-ஆந்திர பிரதேச எல்லை வரை மட்டுமே இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக-ஆந்திர எல்லையில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலையை ஆறு வழிச் சாலையாக மேம்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சாலைகளை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீவிரமாக தயாரித்து வருகிறது.
சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின்படி பெரிய மற்றும் சிறிய பாலங்களும் தேவைப்படும் இடங்களில் கட்டவும் தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இணைப்பு சாலைகள் ஆங்காங்கே கட்டுப்படுத்தப்படுமா அல்லது அப்படியே விரிவுபடுத்துவதோடு விடப்படுமா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், தனியாக அணுகு சாலைகள் அமைக்கப்பட வேண்டும். ஆனால் இப்படி அணுகு சாலைகள் அமைப்பது என்பது பாடியிலிருந்து திருநின்றவூர் வரை நடைமுறையில் சாத்தியமில்லை. சாலையின் வடிவமைப்பினை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாடி - கொரட்டூர் சந்திப்பில் துவங்கும் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை, தற்போது திருநின்றவூர் வரை 22 கி.மீ.க்கு நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே 17.5 கி.மீ., தூரத்தை அகலப்படுத்தும் பணிகள், 304 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது.. வரும் செப்டம்பருக்குள் முடிக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, பாடி - திருநின்றவூர் பிரிவில், நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு, 152 கோடி ரூபாய் ஒதுக்கியதைத் தொடர்ந்து, நில உரிமையாளர்களுக்கு, மாநில நெடுஞ்சாலைத்துறையினர், காலி நோட்டீஸ் வழங்கி இருக்கிறார்கள். அனைத்து நில உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிகாரிகள். நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தனர்.
தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்ட தகவலின்படி, திருநின்றவூர் - திருவள்ளூர் நான்கு வழிச்சாலையில் 17.5 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் நிலம் கையகப்படுத்தி உள்ளார்கள்.இதன் மூலம் எதிர்காலத்தில் ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவும் தயாராக வைத்துள்ளார்கள்.
புதிய நெடுஞ்சாலை பணி முடிந்தால் சென்னையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் திருவள்ளூர் நகருக்குள் செல்லாமல் பைப்பாஸ் சாலையில் போய்விட முடியும். தோழூர், தண்ணீர்குளம் மற்றும் செவ்வாப்பேட்டை வழியாக இந்த பாதை அமைக்கப்படுகிறது.
இந்த நெடுஞ்சாலை பணி முடிந்தால் சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் பெருமளவு குறையும். சூரத்தில் இருந்து சென்னைக்கு 1271 கிமீ தூரம் ஆகும். இதில் தேவைப்படும் இடங்களை நான்கு வழி மற்றும் ஆறு வழி விரைவுச்சாலையை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இந்த திட்டம் சூரத் - நாசிக் - அகமது நகர் - சோலாப்பூர் (513 கிமீ) மற்றும் சோலாப்பூர் - கர்னூல் - கடப்பா - சென்னை (707 கிமீ) ஆகிய இரண்டு பிரிவாக மேற்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications