சென்னை டூ துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிப் போன 278 பயணிகள்
சென்னை: சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் சென்னைக்கே திரும்பியுள்ளது. சென்னையில் இருந்து 278 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து துபாய்க்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏர் இந்தியா, இண்டிகோ, எமிரேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் துபாய்க்கு விமானங்கள் இயக்கி வருகின்றன.

வணிக நோக்கிலும், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னையில் இருந்து துபாய்க்கும் துபாயில் இருந்து சென்னைக்கு பயணம் செய்து வருகிறார்கள். எப்போதும் பிசியாக இருக்க கூடிய விமான ரூட்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்த நிலையில்தான், இன்று சென்னையில் இருந்து 278 பயணிகளுடன் துபாய்க்க்கு எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் எந்திரக்கோளாறு ஏற்பட்டது நடுவானில் கண்டறிய்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பிவிடப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நடுவானில் விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து பயணிகள் பீதி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திலும் சிறிது நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சமீப காலமாக விமானங்களில் அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் நிகழ்வுகள் விமான பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications