எந்த தேர்தலிலும் இல்லாத ஒன்று.. சென்னை டூ கன்னியாகுமரி... மாலை 6 மணிக்கு தெரிய போகும் உண்மை
சென்னை: 2026 சட்டசபை தேர்தல் மற்ற தேர்தல்களிலும் இருந்து தனித்து காணப்படுகிறது. வழக்கமாக தேர்தலில் வாக்களிக்க ஓரளவு மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். அந்த ஆர்வம் 60 முதல் 70 சதவீதம் என்கிற அளவில் தான் இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி இருக்காது. இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என எதிர்பார்க்கலாம்.. ஏனெனில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை எல்லா ஊர்களையும் சேர்ந்த வெளியூர்களில் வசிக்கும் மக்கள் மொத்தமாக கிளம்பி சென்றுள்ளார்கள்.. முதல் முறை மற்றும் இளம் வாக்காளர்கள் பலர் சென்றிருக்கிறார்கள். எனவே வாக்கு சதவீதம் உயரும் வாய்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு நேற்று மாலை சென்னையில் இருந்து ஏராளமானோர் சென்றார்கள்.. இதனால் ரயில் நிலையங்களில் நிற்ககூட இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிந்ததை காண முடியும். குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னையில் தங்கி கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள், வேலை பார்க்கும் ஐ.டி. ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று ரயில் மற்றும் பஸ்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று கொண்டே இருந்தார்கள்.

நேற்று தான் என்று இல்லை... கடந்த மூன்று நாட்களாகவே கூட்டம் அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு ஐந்து வினாடிக்கு ஒரு பேருந்து என்று சொல்லும் அளவிற்கு பரனூர் டோல்கேட்டை கடந்து சென்றபடி இருந்தது. ஆம்னி பேருந்துகளும், அரசு பேருந்துகளும் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்துடன் சென்றதை காண முடிந்தது.
சென்னையில் எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தபடியே இருந்தது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பெண்கள் முண்டியடித்து ஏறிச் சென்றபடி இருந்தார்கள்.
இதேபோல கிளாம்பாக்கம், தாம்பரம் பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் சென்றனர். இதனால் ஜி.எஸ்.டி. சாலை, பெருங்களத்தூர், மதுரவாயல்-தாம்பரம் பைபாஸ் சாலை, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மீஞ்சூர், காஞ்சீபுரம், படப்பை ஆகிய பகுதிகளில் இருந்து வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் வந்து தென் மாவட்டங்கள் நோக்கி பயணம் மேற்கொள்வதால் வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
வழக்கமாக தேர்தலின் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது உண்மை என்றாலும். இந்த முறை சட்டசபை தேர்தலில் முதல் முறை வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் பலர் கண்டிப்பாக ஓட்டு போட்டே ஆக வேண்டும் என்று வெறியுடன் கிளம்பியதை காண முடிந்தது. எந்த சூழ்நிலை வந்தாலும் இன்று வாக்களித்தே தீருவேன் என்று பல லட்சம் பேர் கிளம்பி சொந்த ஊர் சென்றிருப்பது புதிது.
அதேபோல் சென்னையில் வாக்காளர்கள் பலர் வாக்களிக்க வர மாட்டார்கள். ஆனால் இந்த முறை கண்டிப்பாக வாக்காளர்கள் பலர் வாக்களிக்க செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடியும் போது, வாக்கு சதவீதம் உயர்ந்து இருப்பதை காண முடியும். பொதுவாக 70 சதவீதம் வாக்குகள் தான் பதிவாகும். இந்த முறை 80 முதல் 90 சதவீதம் வரை வாக்குகள் பதிவானாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.














Click it and Unblock the Notifications