மெட்ரோவுக்கு போட்டியாக ஏசி புறநகர் மின்சார ரயில்கள்! கடற்கரை-தாம்பரம் டிக்கெட் விலை இதுதான்!
சென்னை: மெட்ரோ ரயில்களுக்கு சென்னை மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், புறநகர் மின்சார ரயில்களையும் ஏசி வசதி கொண்ட ரயில்களாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து தகவல்களை ரயில்வே துறை அதிகாரிகள் DT NEXT செய்தி ஊடகத்திடம் பகிர்ந்துள்ளனர்.
சென்னை தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நகரத்திற்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், சுற்றுலா என பல்வேறு நோக்கங்களுக்காக மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையின் மக்கள் தொகை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இது போக்குவரத்து தேவையையும் அதிகரித்துள்ளது. மக்களின் தேவையை புறநகர் ரயில்கள் சிறப்பாக பூர்த்தி செய்து வருகின்றன.

சென்னை கடற்கரை மற்றும் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையங்களை முனையமாக வைத்து, புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடற்கரை-தாம்பரம்-கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு வரை புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மறுபுறம் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்-ஆவடி-திருவள்ளூர்-அரக்கோணம் வரையிலும், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம்-திருவொற்றியூர்-எண்ணுர்-கும்மிடிப்பூண்டி-நெல்லூர் வரையிலும் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுமார் 80 லட்சம் பயணிகள் புறநகர் ரயிலை பயன்படுத்துகின்றனர்.
குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 இருப்பதால் சாமானிய மக்களுக்கு இந்த ரயில்கள் வரப்பிரசாதமாக இருக்கிறது. ஆனால், இந்த ரயில்கள் விரைவில் ஏசி மயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முதல் கட்டமாக சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இந்த ஏசி மெமு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. DT NEXT செய்தி ஊடகத்திற்கு தெற்கு ரயில்வே அதிகாரி அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் ஏசி ரயிலின் கட்டணம் தலைசுற்ற வைக்கும் வகையில் இருக்கிறது. குறைந்தபட்சமாக 10 கி.மீ வரை ரூ.29 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் எழும்பூரில் ஏறி அடுத்த நிறுத்தமான சேத்துப்பட்டில் இறங்கினால் கூட அதற்கு ரூ.29 கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும். ஆனால் மெட்ரோ ரயிலில் அடுத்த நிறுத்தத்தில் இறங்க ரூ.10 கட்டணமாக செலுத்தினால் போதுமானது என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல ஏசி புறநகர் ரயிலில் 11-15 கி.மீ தொலைவுக்கு ரூ.37 கட்டணமாகவும், 16-25 கி.மீ தொலைவுக்கு ரூ.65 கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இரண்டு வாரம் மற்றும் வார சீசன் டிக்கெட்டுகளை பொறுத்து 10 கி.மீ வரை பயணிப்பவர்களுக்கு ரூ.590, ரூ.445, ரூ.295 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இதே 25 கி.மீ வரை அதாவது எழும்பூரிலிருந்து தாம்பரம் வரை பயணிப்பவர்களுக்கு சீசன் டிக்கெட் கட்டணமாக ரூ.1200, ரூ.900, ரூ.605 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக 491 – 500 கி.மீ தொலைவு வரை பயணிப்பதற்கு ரூ.423 கட்டணமாக செலுத்த வேண்டும். தற்போது வரை கடற்கரைக்கும்-தாம்பரத்திற்கும் இடையே மட்டுமே ஏசி ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் இந்த சேவை விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
என்னதான் மெட்ரோ ரயில்களுக்கு போட்டியாக ஏசி புறநகர் மின்சார ரயில்கள் களம் இறக்கப்பட்டாலும், கட்டண விஷயத்தில் சாமானிய மக்களுக்கானதாக இருக்கப்போவதில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications