அப்படி போடு! தென் மாவட்ட பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. நெல்லைக்கு வருகிறது வந்தே பாரத் ரயில்!
சென்னை: வந்தே பாரத் ரயில் பல வழித்தடங்களில் விரிவு செய்யப்படும் நிலையில், தென் மாவட்டங்களுக்கும் இயக்க ரயில்வேக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களை போல சதாப்தி, ராஜ்தானி போன்ற சொகுசு ரயில்கள் சில வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது. கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக புதுடெல்லி- வாரணாசி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. வந்தே பாரத் ரயிலில் இருக்கும் சொகுசு வசதிகள் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

தென் மாவட்டங்களுக்கு இயக்க கோரிக்கை: இதனால்,அடுத்தடுத்த வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். அது மட்டும் இல்லாமல் ரயிலில் தானியங்கி கதவுகள், ஏசி வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் இப்படி பல வசதிகள் இதில் உள்ளன..
தமிழகத்திலும் சென்னை- மைசூரு இடையேயும் சென்னை - கோவை வழித்தடத்திலும் இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாடு முழுவதும் 19 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் சென்னை - கோவை இடையே ஓடும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் சொல்கிறார்கள். இதனிடையே பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும் தென் மாவட்ட வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.
நெல்லைக்கு வந்தே பாரத் ரயில்: சென்னையில் இருந்து மதுரை வரை வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையுமாக இருந்தது. குறிப்பாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ரயில் பயணிகள் நல வாரிய உறுப்பினர் எம்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
பயணிகள் மத்தியிலும் இந்த கோரிக்கை இருந்த நிலையில், வந்தே பாரத் ரயிலை சென்னை முதல் நெல்லை வரை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் நெல்லை வரை இயக்க ரயில்வே திட்டமிட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பயணிகளுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக உள்ளது. ஏனெனில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.
இதனால் வந்தே பாரத் ரயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டால் கூடுதலாக ரயில் சேவை கிடைக்கும் என்பதோடு அதி நவீன சொகுசு வசதிகளும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிவிரைவு ரயில்களின் வேகத்துக்கு இணையாகவே வந்தே பாரத் ரயிலின் வேகமும் இருப்பதால் ரயில் பாதை பிரச்சினை இல்லை என்றும் பெட்டி தயாரானதும் விரைவில் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications