சொகுசு வசதி.. பொதிகை ரயிலில் முதல்வர் ஸ்டாலினுக்காக தனிப்பெட்டி.. என்னென்ன சிறப்புகள் தெரியுமா?
சென்னை: தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தென்காசி மாவட்டத்துக்கு இன்று ரயிலில் பயணம் செய்ய உள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்காக தனிப்பெட்டி இணைக்கப்பட உள்ளது. இந்த பெட்டியை ‛நகரும் வீடு' என அழைக்கும் வகையில் ஏராளமான வசதிகள் உள்ளன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று புதிய திட்டங்கள் துவக்கி வைக்கிறார். அதோடு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ! அலறிய பயணிகள்! ஓடும் ரயிலில் திக் திக் நொடிகள்! என்ன காரணம்?
2 நாள் சுற்றுப்பயணம்
இந்நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தென்மாவட்டங்களுக்கு புறப்பட உள்ளனர். இன்று சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 8.40 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை காலை தென்காசியை வந்தடைகிறார். அதன்பிறகு குற்றாலத்தில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மதுரையில் முதலமைச்சர்
அதன்பிறகு தென்காசியில் இருந்து புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் நாளை இரவு மதுரை செல்ல உள்ளார். மதுரையில் இரவில் ஓய்வு எடுக்கும் முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் காலை மாநகராட்சி வளைவு மற்றும் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதன்பிறகு மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்.
முதல் முறையாக ரயில் பயணம்
பொதுவாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றால் விமானம் அல்லது காரில் செல்வது வழக்கம். ஆனால் தற்போது அவர் முதல் முறையாகக ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் ரயில் பயணத்துக்காக பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறப்பு பெட்டியில் ‛நகரும் வீடு’
அதன்படி முதலமைச்சர் ஸ்டாலின் பயணத்துக்காக ரயிலில் சிறப்பு பெட்டி இணைக்கப்பட உள்ளது. முக்கிய பிரமுகர்களாக இருக்கும் ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர் பயணிக்கும்போது வழங்கப்படும் சிறப்பு ரயில் பெட்டி முதலமைச்சர் ஸ்டாலினுக்காக இணைக்கப்பட உள்ளது. இந்த பெட்டியை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ‛நகரும் வீடு' என்றே கூறலாம். ஏனென்றால் வீட்டில் உள்ளது போன்று அனைத்து வசதிகளும் இந்த பெட்டியில் இருக்கும்.
வசதிகள் என்னென்ன?
அதன்படி இந்த பெட்டியில் 2 படுக்கையறைகள் இருக்கும். உடன் பயணிப்போர் ஓய்வு எடுக்க வசதியாக 4 முதல் 6 படுக்கை வசதிகள் இருக்கும். ஏசி வசதி உள்ளது. இருக்கைகள், சோபாக்களுடன் மினி மீட்டிங் ஹால் வசதியும் இந்த பெட்டியில் உண்டு. மேலும் சமையல் பொருட்களுடன் கூடிய சமையல் அறை, டைனிங் ஹால், வெந்நீர் தொட்டி, குடிநீர் சுத்திரிகரிப்பு இயந்திரம், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வசதிகள் இருக்கும். மேலும் ரயில் பெட்டியின் பின்புறத்தில் இயற்கையை ரசிக்கும் வகையில் பெரிய ஜன்னல் வசதியும் இருக்கும்.
கடைசி பெட்டியாக இணைப்பு
இத்தகைய வசதிகள் கொண்ட இந்த பெட்டி எப்போதும் ரயிலின் கடைசி பெட்டியாகவே இணைக்கப்படும். அதன்படி பொதிகை ரயிலில் சிறப்பு பெட்டி கடைசியாக இணைக்கப்பட உள்ளது. மேலும் முதலமைச்சருக்காக ரயில் பெட்டியில் ஏசி உதவியாளர், ஒரு பொது உதவியாளர் இருப்பார்கள். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பு அதிகாரி பயணம் செய்வார். இதுதவிர முதலமைச்சரின் பாதுகாப்புக்காக அந்த ரயிலில் போலீசாரும் பயணிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.