சென்னைக்குள் என்ட்ரி ஆக முடியவில்லை.. ஜிஎஸ்டி சாலையில் கடும் ‘டிராபிக்’.. 2 கிமீ நிற்கும் வாகனங்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்து விட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக இன்று சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை சிங்கபெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலை உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்வதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 23ம் தேதி (வியாழன்)நடந்து முடிந்தது. தேர்தலையொட்டி பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்தனர். அதன்பிறகு வெள்ளி, சனி மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை வரை சொந்த ஊரில் இருந்த மக்கள் மீண்டும் சென்னை புறப்படடுள்ளனர்.
இன்று மதியமே பலரும் கார், பஸ்களில் சென்னை புறப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் ஏராளமான மக்கள் சென்னை புறப்பட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் சிங்கபெருமாள் கோவில் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கினறன. இப்போது இரவாகியும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து வருகிறது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அதேபோல் சென்னை திரும்புவதற்காக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, மதுரை மாவட்ட பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளனர். எஸ்இடிசி, தனியார் பஸ்கள் தவிர சென்னை செல்லும் சாதாரண அரசு பஸ்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. ரயில்கள் மற்றும் பஸ்களில் பயணிகள் நின்றபடி பயணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications