சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி மரணம்.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்.. யார் இந்த புல்லட் குமரன்?
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், பிரபல ரவுடியுமான புல்லட் குமரன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
2015ஆம் ஆண்டு திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியைச் சேர்ந்த மார்க்கெட் முரளியை கொலை செய்த வழக்கில் புல்லட் குமரன் முக்கிய குற்றவாளியாக இருந்தார். பின்னர் அதிமுக பிரமுகரின் ஆதரவுடன் அப்பகுதியில் அரசியல் பிரமுகராக தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் புல்லட் குமரன். இந்நிலையில், அவர் நேற்று மாரடைப்பால் காலமானார்.

சென்னை திருவல்லிக்கேணி ஜாம் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. மார்க்கெட் முரளி என அழைக்கப்பட்டு வந்தார். போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட அயோத்திக்குப்பம் வீரமணியின் கூட்டாளியான மார்க்கெட் முரளியின் மீது சில கொலை வழக்குகள் இருந்தன.
பின்னர் ரவுடியிச வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த மார்க்கெட் முரளி, ஜாம்பஜார் மார்க்கெட்டில் நான்கு கோழிக்கறி கடைகள், காய்கறி கடைகள், 20 கார்களுடன் டிராவல்ஸ் மற்றும் கேபிள் டிவி நிறுவனம் ஆகியவற்றை நடத்தி வந்தார். ஜாம்பஜார் பகுதியில் பெரிய தொழில் அதிபர் போல் வலம் வந்தார்.
மார்க்கெட் முரளிக்கும் அதே பகுதியில் உள்ள புலிபோன் பஜார் பகுதியை சேர்ந்த ரவுடி புல்லட் குமரன் என்பவருக்கும் கடந்த இடையே தொழில் போட்டி இருந்து வந்தது. எனினும் இருவரும் அவ்வப்போது நட்புடன் பேசி வந்தனர். இந்நிலையில் ஒரு ரவுடி கொலை விவகாரத்தில் கொல்லப்பட்ட ரவுடியின் மகன், புல்லட் குமரனுடன் சேர்ந்து மார்க்கெட் முரளியை கொலை செய்தார்.
கோவில் திருவிழா தொடர்பாக பேசுவதற்காக புல்லட் குமரன் வீட்டுக்குச் சென்ற மார்க்கெட் முரளி, திரும்பி வீட்டுக்கு வராத நிலையில், மார்க்கெட் முரளியின் குடும்பத்தினர் புல்லட் குமரனின் வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டிக்கிடந்தது. மாடி படிகளில் ரத்தக்கறைகள் படிந்து கிடந்தன.
வீட்டை உடைத்துப் பார்த்தபோது கழுத்து, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் அரிவாள் வெட்டு மற்றும் வயிற்றில் கத்தி குத்து காயங்களுடன் கொடூரமான முறையில் முரளி கொல்லப்பட்டு கிடந்தார். புல்லட் குமரன் மற்றும் அவரது நான்கு மகன்கள், இன்னொரு ரவுடியுடன் சேர்ந்து முரளியை தீர்த்து கட்டியதாக கூறப்பட்டது.
அதன்பிறகு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் புல்லட் குமரன். பின்னர் அதிமுகவில் முக்கிய பிரமுகராக அப்பகுதியில் வலம் வந்தார் புல்லட் குமரன். இந்நிலையில், நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 53. அவரது உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications