உங்கள் BLO அதிகாரியை பாருங்கள்.. வாக்காளர்கள் இனி செய்ய வேண்டியது என்ன.. சென்னை கமிஷனர் விளக்கம்
சென்னை: சென்னை மாநகராட்சியில் வாக்காளர்கள் இறுதிநாளான 4ம் தேதி வரை காத்திருக்காமல் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனரும், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கும் பணி கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதுகுறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதற்கு உதவும் வகையில், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழிகாட்டுதலுடன் படிவத்தினை பூர்த்தி செய்யவும் வழிவகை செய்யப்பட்டதன் மூலமாக பெரும்பாலான கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை வழங்கி, திரும்ப பெறும் பணியை வருகிற 4-ந்தேதி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் தேர்தல் கமிஷனின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பணியை முழுமையாக பூர்த்தி செய்யும் வகையிலும், வாக்காளர்கள் இறுதிநாள் வரை காத்திருக்காமல் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விரைந்து வழங்க வேண்டும். இவ்வாறு கணக்கீட்டு படிவத்தினை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.
எனவே, வாக்காளர்கள் தங்களுக்கான கணக்கீட்டு படிவத்தினை உடனடியாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம். தேர்தல் கமிஷனின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை சென்னை மாவட்டத்தில் நிறைவேற்றுவதற்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு கமிஷனர் ஜெ.குமரகுருபரன் ஐஏஎஸ் அறிவுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications