திமுகவில் சென்னை மேற்கு மாவட்டம் 2-ஆக பிரிப்பு... மறைந்த ஜெ.அன்பழகன் ஆதரவாளருக்கு வாய்ப்பு..!
சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுகவை இரண்டாக பிரித்துள்ளது அக்கட்சியின் தலைமை.
சென்னை மேற்கு - சென்னை தென் மேற்கு என நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனமும் நடந்துள்ளது.
அதன்படி சென்னை மேற்கு மாவட்டத்திற்கு ஏற்கனவே பொறுப்பில் உள்ள சிற்றரசுவும், சென்னை தென் மேற்கு மாவட்டத்திற்கு மயிலை வேலுவும் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
சென்னை மேற்கு
சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன் கொரோனா காரணமாக அண்மையில் காலமானார். இதையடுத்து அவரது இடத்திற்கு சிற்றரசு நியமிக்கப்பட்டார். இதற்கு சென்னை மேற்கு மாவட்ட திமுக சீனியர்கள் மத்தியில் ஆட்சேபனை எழுந்தது. இருப்பினும் ஸ்டாலின் எடுத்த நேரடி முடிவு என்பதால் அனைவரும் கப்சிப் ஆனார்கள். ஆனாலும் தொடர்ந்து சிற்றரசுக்கு எதிரான வேலைகள் நடந்துகொண்டிருந்தன.
மயிலை வேலு
இதனால் இதனை இப்படியே விட்டால் தேர்தல் நேரத்தில் சிக்கலை உருவாக்கி விடுவார்கள் எனக் கருதிய ஸ்டாலின், கே.என்.நேரு மூலம் ஆய்வு நடத்தி இன்று புதிய அறிவிப்பை வெளியிட வைத்துள்ளார். அதன் படி சென்னை மேற்கு- சென்னை தென் மேற்கு என இரண்டாக மாவட்டம் பிரிக்கப்பட்டு மறைந்த ஜெ.அன்பழகன் ஆதரவாளரான மயிலை வேலுவை மாவட்ட பொறுப்பாளராக கொண்டு வந்திருக்கிறார்.
2 தொகுதிகள்
சென்னை மேற்கு மாவட்டத்தில் ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றையும் ஏற்கனவே மாவட்ட பொறுப்பாளராக உள்ள சிற்றரசு கவனித்துக் கொள்வார். இப்போது புதிதாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தென் மேற்கு மாவட்டத்தில் தியாகராயர் நகர், மயிலாப்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு தொகுதிகளையும் மயிலை வேலு கவனித்துக் கொள்வார்.
அரசியல் செய்ய
சென்னையை பொறுத்தவரை வளம் கொழிக்கும் பகுதி என்றால் அது தி.நகர் பகுதி தான். இந்த பகுதியை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு பொறுப்பாளராக மயிலை வேலு நியமிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்களும், மறைந்த ஜெ.அன்பழகன் ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர். இதனிடையே அதிமுகவின் தி.நகர் சத்யாவை எதிர்த்து அரசியல் செய்ய சிற்றரசுவை காட்டிலும் மயிலை வேலு சரியானவர் என்ற காரணத்தினால் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாக திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் களம்
இதனிடையே சென்னை வடக்கு மாவட்டம் சென்னை வடக்கு- சென்னை வட கிழக்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை வடகிழக்கிற்கு மாதவரம் சுதர்சனமும், சென்னை வடக்குக்கு இளைய அருணாவும் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் இளைய அருணா என்பவர் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியை உள்ளடக்கிய மாவட்டத்திற்கு பொறுப்பாளராகியுள்ளார். இதனால் சென்னையில் அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.