சென்னையில் ஒரு கொடைக்கானல்.. எங்கு தெரியுமா.. மாலையும் இரவும் கனமழை இருக்கு.. ஹேப்பி அண்ணாச்சி
சென்னை: சென்னையில் ஒரு கொடைக்கானல் போல் மழையானது பெய்து கொண்டே இருக்கிறது. இரவு மற்றும் மாலை நேரங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான தூறல் இருந்தது. மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. வேப்பேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. வாகனங்களும் மெதுவாக ஊர்ந்து சென்றன. தமிழகம், புதுவையில் வரும் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே போல் தென் தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல், லட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும்அதனையொட்டிய அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசும் என்பதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் காலை முதலே சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. பிசுபிசுவென பெய்த மழை சென்னைக்கு குளிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த மழை குறித்து சென்னை ரெயின்ஸ் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பருவமழையை போல் பெய்து வரும் மழையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். சென்னையில் தற்போதைய வெப்பநிலை 26 டிகிரியாகும். சில இடங்களில் லேசான தூறலும் மழையும் பெய்து வருகிறது. இதனால் சென்னையில் ஒரு கொடைக்கானல் போல் உள்ளது. விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்காடு போல் வெயிலே இல்லாமல் ஒரு மாதம் இருந்தால் நன்றாக இருக்கும். அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications