குவாரண்டைன் இனி இல்லை.. இரண்டு குட் நியூஸ்.. சென்னை மாநகராட்சி ஆணையர் பரபர பேட்டி
சென்னை: சென்னைக்கு இனி தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் தனிமைப்படுத்துதல் முறை கிடையாது என்றும், . இதுபோல் தகரம் அடிக்கும் முறையும் கிடையாது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள தமிழக அரசு, இனி தனிமைப்படுத்துதல் முறையிலும் தளர்வுகளை அறிவித்துள்ளது.
முன்பு சென்னைக்கு யாரேனும் வந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்று இருந்தது. இந்நிலையில் வணிக நடவடிக்கைக்காக 3 நாட்களில் வந்து செல்லும் வெளிமாநிலத்தவருக்கு அதில் இருந்து அண்மையில் விலக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் எங்கிருந்து யார் வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில்கள்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகையில் நேற்று இது தொடர்பாக அவர் பேட்டியில் கூறும் போது, தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏராளமான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில்(செப்.7) மெட்ரோ ரயில்கள் சென்னையில் இயக்கப்பட உள்ளது. இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை மாநகராட்சி
இந்தியாவில் உள்ள மற்ற மாநகராட்சிகளிலேயே சென்னை மாநகராட்சியில் தான் அதிக கொரோனா பரிசோதனை (பிசிஆர் பரிசோதனை) நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 11 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மிக அதிகளவிலான பரிசோதனைகள் தொடர்ந்து செய்வோம். இதன் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

வீடு வீடாக சோதனை
பொதுபோக்குவரத்து தொடங்கியுள்ளதால் இயல்பு நிலை மிகவேகமாக திரும்புகிறது. எனவே சோதனை முறையில் சில மாற்றங்களை செய்துள்ளோம். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீட்டில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்படும். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இனி அதிக சோதனை நடத்தப்படும். வீட்டிற்கு வீடு சென்று ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெறும்.
Recommended Video

குவாரண்டைன் இல்லை
தனிமைப்படுத்தப்படுவதில் சில மாற்றங்களை செய்துள்ளோம். இதன்படி இனி . வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதல் முறை கிடையாது. வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் மட்டும் வீட்டுதனிமையில் அனுமதிக்கப் படுவார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் நடைமுறை இனி பின்பற்றப்படாது.. மெரினா கடற்கரை திறப்பு குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை உயர்மட்ட குழு ஆய்வு செய்து வருகிறார்கள்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications