65 வயதில் மறுமணத்திற்கு பெண் தேடிய சித்த மருத்துவர்! ஆசை காட்டி சம்பவம் செய்த சென்னை கீதா
சென்னை: திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி திருவண்ணாமலையை சேர்ந்த சித்த மருத்துவரை ஏமாற்றி நகைகளை அபேஸ் செய்த சென்னையை சேர்ந்த 57 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதே பாணியில் பலரிடம் அந்த பெண் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 65). சித்த மருத்துவர். இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இரண்டு மகள்கள் இவருக்கு உண்டு. அவர்களும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார்கள். வீட்டில் ராமநாதன் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

விதவை மணமகள் தேவை
இதனால் ராமநாதன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். மேலும் இதற்காக விளம்பரம் கொடுத்து இருந்தார். "ஆதரவற்ற விதவை மணமகள் தேவை" என்று விளம்பரம் செய்து இருந்தார். இதை பார்த்து ஒரு பெண் ராமநாதனுக்கு போன் செய்துள்ளார். தான் சென்னையில் வசித்து வருவதாகவும், தனது பெயர் கீதா என்றும் அவர் கூறியிருக்கிறார். அவருக்கு வயது 57.
இருவரும் செல்போனில் பேசி வந்தனர். அப்போது இருவருக்கும் திருமணம் செய்வதில் ஒத்துப்போனது. கீதாவும் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். ஆசை வார்த்தையுடன் பேசியுள்ளார். உடனே திருமண ஏற்பாடுகளை செய்தனர். அப்போது, தாலி, தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதற்காக சென்னை வரும்படி ராமநாதனை கீதா அழைத்துள்ளார்.
தாலி, மூக்குத்தி, மெட்டி
அதன்பேரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு கிளம்பிய ராமநாதன், கீதாவை டிநகருக்கு அழைத்து சென்று 2 கிராம் தங்கத் தாலியும், ஒரு கிராம் மெட்டி மற்றும் வெள்ளி மெட்டிகள் இரண்டு ஜோடி என வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து ஜவுளி கடைக்கு அழைத்து சென்று பட்டுப்புடவையும் வாங்கி கொடுத்துள்ளார். தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, தன் உறவினர் ஒருவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், போகும் வழியில் பார்த்துவிட்டு செல்வோமா என்று ராமநாதனை அழைத்துள்ளார்.
அதன்பேரில் இருவரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது நோயாளிகள் வார்டுக்கு சென்று வருவதாக கூறி அவரை வெளியே அமர வைத்துவிட்டு கீதா சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. செல்போனுக்கு கால் செய்து பார்த்துள்ளார். ஆனால் செல்போன் எண் சுவிட்ச் ஆப் ஆனது தெரியவந்தது. உள்ளே ஆஸ்பத்திரியில் ஊழியர்களிடம் விசாரித்து பார்த்த போது அப்படி ஒருவர் இங்கே இல்லை என்று கூறிவிட்டனர்.
ஏமாந்து போன முதியவர்
இதன் பிறகே வாங்கிக் கொடுத்த நகையுடன் அவர் ஓட்டம் பிடித்தது தெரிந்தது. ஏமாந்து போன ராமநாதன் இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 4 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கீதாவை நேற்று போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில், ராமநாதனிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய நகைகளை போலீசார் மீட்டனர். விசாரணையில், கீதா இதே பாணியில் பலரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம், நகை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கீதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications