சென்னையில் நடுரோட்டில் டிராபிக் போலீஸ் கேட்ட அந்த ஒரு கேள்வி.. உடைந்து அழுத பெண்.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் வழக்கம் போலத் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அவர் எந்தவொரு விதிகளையும் மீறவில்லையாம். அப்போது திடீரென டிராபிக் போலீஸ் அவரை நிறுத்தியிருக்கிறார். ஏன் என்னாச்சு என அவர் கேட்டுள்ளார். அந்தப் பெண்ணை பார்த்த போலீஸ் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டிருக்கிறார். அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர் கொட்டியுள்ளது.
பெரும்பாலும் நாம் டிராபிக் போலீஸ் என்றாலே ஒருவித அச்சத்தோடு தான் அணுகுவோம்.. என்ன சொல்லி என்ன அபராதம் போடுவார்களோ என்ற பயம் டிராபிக் போலீசை பார்க்கும் போதெல்லாம் இருக்கும். ஆனால், எல்லாக் காவலர்களும் அப்படி இல்லை. பல நல்ல காவலர்களும் இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு காவலரைத் தான் சென்னையைச் சேர்ந்த பெண் எதிர்கொண்டுள்ளார்.

சென்னை பெண்
அந்தப் பெண்ணுக்கு அடுத்து என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. ஜனனி பொற்கொடி என்ற அந்தப் பெண் சமீபத்தில் போக்குவரத்து காவலரைச் சந்தித்தபோது ஏன் கண்ணீர்விட்டு அழுதேன் என்பது குறித்த தகவல்களைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த டிராபிக் போலீஸ் உண்மையான அக்கறையுடன் கேட்ட கேள்வி தன்னை கலங்க வைத்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பக்கத்தில் மேலும், "கடந்த வாரம், நான் ஒரு போக்குவரத்து காவலர் முன்னிலையில் உடைந்து அழுதேன்... நான் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன்.. நான் அப்போது சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தேன். வேலை, அழுத்தம், எதிர்பார்ப்புகள் என அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தன. அப்போது ஒரு போக்குவரத்து காவலர் என்னை நிறுத்தினார். எதற்காக நிறுத்தினார் என்று கூட எனக்கு நினைவில்லை.
அந்த ஒரு கேள்வி
ஆனால், போக்குவரத்து விதிமீறலுக்காக என்னை நிறுத்தவில்லை. அதற்காக அவர் சண்டையும் போடவில்லை. அந்த அதிகாரி என்னிடம், "என்ன ஆச்சு? நீங்க நல்லா இருக்கீங்களா?" என்று கேட்டார். யாரோ ஒருவர் அக்கறையுடன் கேட்ட அந்த ஒரு கேள்வியால் கண்ணீர் கொட்டியது. எத்தனை வாரங்களாக நான் உள்ளுக்குள் போட்டு அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளையெல்லாம் அந்த ஒரு கனிவான வார்த்தை வெளிக்கொண்டு வந்துவிட்டது.
வலிமை என்பது எது!
அந்த அழுகை என்னை லேசாக்கியது. நான் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். மேலும் தெளிவாக உணர்ந்தேன். நாம் எவ்வளவுதான் வலிமையாக இருக்க முயன்றாலும், நாம் எல்லாருமே பலவீனமானவர்கள்தான். உடைந்து அழுவதில் தப்பில்லை. உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தப்பில்லை. யாராவது கஷ்டப்படுவதை நீங்கள் பார்த்தால், ஒரு கனிவான வார்த்தை உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கனிவாக இருப்போம். நம்மிடமும், மற்றவர்களிடமும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கருத்து
அவரது இந்த மனதைத் தொடும் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியது.. பலரும் அந்தப் பெயர் தெரியாத அன்பான போலீஸ் அதிகாரியைப் பாராட்டினர். நெட்டிசன் ஒருவர், "சில நேரங்களில் நாம் உடைந்துவிடுவோம், அப்போது யாராவது ஒருவர் நலமாக இருக்கிறீர்களா என்று கேட்டாலே போதும்... அந்தக் கனிவான வார்த்தைகள் நமக்கு ஆறுதல் அளிக்கும்" என்று பதிவிட்டார்.
மற்றொரு நபர், "சில நேரங்களில் நல்லா இருக்கீங்களா என்ற எளிமையான கேள்வி.. நமது உணர்ச்சியை மொத்தமாகத் திறந்துவிடும். வலிமை என்பது ஒருபோதும் உடைந்து போகாமல் இருப்பது இல்லை என்பதை நினைவூட்டியதற்கு நன்றி. கருணை நம்மைத் தேடி வரும்போது அதை ஏற்றுக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். ஒரு எளிய கனிவான வார்த்தை அல்லது கேள்வி, மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications