சென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்த இளைஞர்.. உயிருக்கு ஊசலாடும் ப்ரீத்தி.. நடந்த பயங்கரம்!
சென்னை: சென்னையில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து இளம்பெண்ணை கத்தியால் குத்தி செயின் பறித்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை மைலாப்பூர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடிக்க தண்ணீர் கேட்பது போல் வந்து வீட்டின் பீரோவில் நகையை திருட முயன்ற பெண் கையும் களவுமாக பிடிப்பட்டார். அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இந்த சூழலில் நேற்று முன்தினம் சென்னை கேகே நகரில் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்து இளம் பெண்ணை கத்தியால் கத்தி நகையை பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. வாடகைக்கு வீடு பார்ப்பது போல நடித்து திருடும் சம்பவங்கள் மீண்டும் சென்னையில் நடைபெற தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போர்டை பார்த்த திருடன்
சென்னை கே.கே.நகர் பொன்னம்பலம் பதியில் வசிப்பவர் ப்ரீத்தி (31). இவரது வீட்டின் ஒரு பகுதி வாடகைக்கு விட்டு வருகிறார். வீட்டில் புதிய குடித்தனம் வர விரும்புபவர்களுக்காக வாடகைக்கு வீடு உள்ளது என போர்டு வைத்திருந்தார். இதை நோட்ட மிட்ட திருடர் ஒருவர் கைவரிசையை காட்ட திட்டமிட்டிருக்கிறார்.
செயினை பறிக்க முயற்சி
நேற்று முன்தினம் மாலை ப்ரீத்தி மட்டும வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் வாடகைக்கு வீடு வேண்டும், என்று கேட்டுள்ளார். இதனால், ப்ரீத்தி அவரை அழைத்து சென்று வீட்டை சுற்றிக்காட்டி இருக்கிறார். அப்போது, அந்த இளைஞர் திடீரென ப்ரீத்தியின் கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார்.
கத்திய ப்ரீத்தி
அதிர்ச்சியடைந்த ப்ரீத்தி அந்த வாலிபரை பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த அந்த வாலிபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ப்ரீத்தி வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.
சிக்கிய திருடன் திருடன்
தகவலறிந்து கே.கே.நகர் போலீசார், விரைந்து வந்தனர். பொதுமக்களிடம் இருந்து திருட்டு வாலிபரை மீட்டனர். மேலும் உயிருக்கு போராடிய ப்ரீத்தியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதித்தனர். பின்னர், பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில், கே.கே.நகர் பானு நகரை சேர்ந்த பார்த்திபன் (30) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.