ஆபாச போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் கடன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை - சென்னையில் சோகம்
சென்னை: சென்னையில் ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கிய இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். கடன் தொகையை முழுவதும் கட்டிய பிறகும், அவரிடம் பணம் கேட்டு கடன் செயலியை சேர்ந்த ஊழியர்கள் தொந்தரவு செய்துள்ளதால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த அந்த இளைஞர், தான் உயிரிழப்பதற்கு முன்பாக தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசில் முழு விவரத்தையும் வைத்துவிட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இதில், "எனது ஆபாச போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பி ஆன்லைன் கடன் ஆப் நிறுவனம் மிரட்டியதாக கூறியுள்ளார்".

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய கடன் தொகையை முழுவதும் கட்டிய பிறகும், அவரிடம் பணம் கேட்டு கடன் செயலியை சேர்ந்த ஊழியர்கள் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் கோபிநாத்தின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்களுக்கும் அனுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த கோபிநாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழப்பதற்கு முன்பாக தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டசில் முழு விவரத்தையும் வைத்துவிட்டு தற்கொலை செய்து இருக்கிறார்.
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய இளைஞர், கடன் செயலியின் சித்தரவதையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபிநாத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து எழும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, கோபிநாத்தின் பெற்றோர் தனது மகன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கண்ணீருடன் பேசியதாவது:- என் மகன் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஒரு 10 நாள் முன்னாடி கடன் இருப்பதாகவும் கொஞ்சம் உதவி செய்யுமாறும் கூறினார். சரி என்று ஒரு 30 ஆயிரம் வாங்கி கொடுத்தோம்.
"நான் எல்லோருக்கும் பணம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். பணம் அனுப்பினால் கூட போகவில்லை. அதனால் மிரட்டுகிறார்கள். என் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக அனுப்புகிறார்கள். என் மானமே போகுது என்றான்". இருடா.. எல்லாம் பார்த்துக்கலாம்.. கமிஷனர் ஆபிசில் போய் புகார் கொடுக்கலாம் என்று சொன்னோம்.
ஆனால் காலையில் போய் பார்த்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். எங்களால் எதுவுமே பண்ண முடியவில்லை. அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளான். 50 ஆயிரம் கடன் வாங்கியதால் என் மானம் போகிறது என்றதும், நகையை அடமானம் வைத்து 30 ஆயிரம் கொடுத்தோம். ஒரு கடனை வாங்க இன்னொரு கடனை ஏன் வாங்குகிறாய் என கேட்டோம்.. எதற்காக கடன் வாங்கினான் என்றே தெரியவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications