அதிகாலையில் ஆசை ஆசையாக.. மட்டன் பிரியாணி சாப்பிட்ட சென்னை இளைஞர்! சில நிமிடங்களில் பரிதாபமாக பலி
சென்னை: தலைநகர் சென்னையில் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நவீனக் காலத்தில் மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உணவு முறைகளும் தொடர்ந்து மாற்றமடைந்தே வருகிறது.
குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் இளைஞர்கள் பலரும் அதிகப்படியான உணவை எடுத்துக் கொண்டு வருகின்றனர். இதைத் தவறானது என்று பலரும் எச்சரித்தாலும் இதை இளைஞர்கள் கேட்பதாக இல்லை.

பிரியாணி
தமிழ்நாட்டில் பிரியாணிக்கு எனத் தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். நம்ம ஊரில் தெருவுக்கு நாள் பிரியாணி கடைகளை நம்மால் எளிதாகப் பார்க்க முடியும். நம்ம ஊரில் தினமும் பிரியாணி சாப்பிடுபவர்களைக் கூட எளிதாக பார்க்கலாம். பிரியாணி சாப்பிட்டால் ஆண்மை குறைய வாய்ப்புள்ளதாக எல்லாம் பரவிய தகவல்கள் பொய்யானது என்று மருத்துவர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை இளைஞர்
அதேநேரம் அதிகாலை நேரத்திலும் நள்ளிரவு நேரத்திலும் பிரியாணி என்றில்லை, எந்தவொரு ஹெவியான உணவையும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே அதிகாலை நேரத்தில் பிரியாணி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த இளைஞர் மதன்குமார்.

நள்ளிரவு
இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். 38 வயதான மதன்குமார் அங்கு கேட்டரிங் வேலை செய்து வந்தார். மேலும், இவர் 71வது வட்ட திரு.வி.க. நகர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல கேட்டரிங் வேலைக்குச் சென்றுள்ளார். வேலை எல்லாம் முடிந்து வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

வாந்தி மயக்கம்
நேற்று அதிகாலை 2 மணியளவில் அவர் பணி முடிந்து வரும் போது மட்டன் பிரியாணியை வீட்டிற்கு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளார். இருப்பினும் மட்டன் பிரியாணியைச் சாப்பிட்ட கொஞ்ச நேரத்திலேயே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, திடீரென வாந்தி எடுத்துள்ளார். வயிற்று கோளாறால் அவர் வாந்தி எடுப்பதாகவே அவரது குடும்பத்தினர் நினைத்துள்ளனர். இருப்பினும், வாந்தி எடுத்து சிறிது நேரத்திலேயே அவர் திடீரென மயங்கி உள்ளார்.

உயிரிழப்பு
இதனால் பதறிய அவரது மனைவி திவ்யா உடனடியாக கணவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரை அங்கிருந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரியாணியால் உடலுக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்ற போதிலும், நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் பிரியாணி மட்டுமின்றி எந்தவொரு ஹெவி உணவுகளையும் எடுக்க வேண்டாம் என்றே மருத்துவர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications