செஸ் ஒலிம்பியாட்.. இன்று ஒருநாள் ப்ரேக்.. கால்பந்தில் சாகசம் நிகழ்த்திய சர்வதேச செஸ் வீரர்கள்!
சென்னை: சென்னையின் எப்.சி. கால்பந்து அணி நடத்திய நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகளில், சர்வதேச செஸ் வீரர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிபடுத்தினர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஐந்து சுற்றுகளுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி தொடர்ந்து வெற்றிப்பாதையில் முன்னேறி வருகிறது. ஒவ்வொரு நாளும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆர்வம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. அதனால் செஸ் ஒலிம்பியாட்டை நேரில் காண வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
செஸ் ஒலிம்பியாட்.. பிரம்மாண்ட நிறைவு விழாவுக்கு தயாராகும் சென்னை.. ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு!
அதிகரிக்கும் ஆர்வம்
சர்வதேச வீரர், வீராங்கனைகள், உள்ளூர் முதல் சர்வதேச மீடியாக்கள், அரங்குகள், செஸ் நிர்வாகிகள், தமிழக அரசின் ஏற்பாடுகள் ஆகியவற்றை நேரில் பார்க்க வேண்டும் என்றே ஏராளமானோர் மாமல்லபுரம் வரத் தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், சர்வதேச செஸ் போட்டியை குழந்தைகள் மீண்டும் நேரில் காணும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் எப்போது கிடைக்கும் என்பது தெரியாததால், பெற்றோரும் அழைத்து செல்ல தொடங்கியுள்ளனர்.
ஒருநாள் ஓய்வு
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று ஒருநாள் வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் ஒருநாள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று செஸ் போட்டியில் கவனம் செலுத்தாமல், பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம் சுற்றுலா
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். அதேபோல் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாடி வருகின்றனர். குறிப்பாக பல்லவ சிற்பக் கலையை போற்றும் வகையில் உள்ள கடற்கரை கோவில், கிருஷ்ண மண்டபம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
Recommended Video
சென்னையில் கால்பந்து
இதேபோல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள வீரர்களுக்கு நட்பு ரீதியிலான கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் 6 அணிகளாக வீரர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட செஸ் வீரர்கள், நிர்வாகிகள் கால்பந்து திறமையை வெளிப்படுத்தினர். சென்னையின் எப்.சி. அணி சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டிகள் வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.