சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் ரிசல்ட்.. பாஜக பக்கம் திசை மாறிய காற்று.. ஆட்சியை கைப்பற்றியது
சென்னை: சத்தீஸ்கரில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
சத்தீஸ்கரில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 17ஆம் தேதி இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு கட்ட தேர்தல்களையும் சேர்த்து சத்தீஸ்கர் தேர்தலில் 76.31% வாக்குகள் பதிவாகியிருந்தது.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்த மாநிலத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில் பல்வேறு கருத்துக் கணிப்புகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தெரிவித்துள்ளன. சத்தீஸ்கரின் ஆரம்ப நிலைகளின் விவரங்களின்படி, காங்கிரஸ் முன்னிலை வகித்தது. பாஜகவும் விடாமல் விரட்டி வந்தது.
நேரம் செல்லச்செல்ல காற்று பாஜகவிற்கு சாதகமாக வீசியது. பாஜக 54 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தது. ஆட்சி அமைக்க மொத்தம் 46 தொகுதிகள் தேவை என்ன நிலையில் பாஜக 54 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.
கருத்துக்கணிப்புகள் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே கூறப்பட்ட நிலையில் இன்றைய தினம் வெளியான முடிவுகள் பாஜகவிற்கு சாதகமானது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரியணை ஏறப்போகிறது பாஜக. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பாஜக தொடர்ச்சியாக 3 முறை ஆட்சியில் இருந்தது. 2018ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
5 ஆண்டுகள் எதிர்கட்சி வரிசையில் பாஜக அமர்ந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந் சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications