சட்ட விரோதம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் விசயத்தில் பின் வாங்க மாட்டோம்.. சேகர்பாபு
சென்னை: எவையெல்லாம் சட்ட விரோதமோ அவையெல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சிதம்பரம் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் பின் வாங்கப்போவதில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சிவபெருமானின் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுவது நடராஜர் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள தீட்சிதர்களுக்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாகவே பனிப்போர் நீடிக்கிறது. பக்தர்கள் அனுப்பிய புகாரின் அடிப்படையில் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நகைகள், சொத்துக்களை கணக்கு பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று தீட்சிதர்களிடம் கேட்டனர். அதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை கோவில் நகைகள் சரிபார்க்கப்பட்டது. தணிக்கை செய்யப்பட்ட நகைகளை மீண்டும் தணிக்க செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடராஜர் கோவிலில் திருமஞ்சன தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த வாரம் (17 ஆம் தேதி) நடந்தது. வரும் 25 ஆம் தேதி ஆனி திருமஞ்சன தேர்த் திருவிழாவும், 26 ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சிவ பக்தர்கள் பொதுமக்கள் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழாவிற்கான கோலாகலம் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பலரும் வந்து சிதம்பரம் நடராஜரை தரிசித்து செல்கின்றனர்
இதனிடையே சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த சிவ பக்தர் கார்வண்ணன் என்பவர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்துள்ளார். 61 வயதான இவர் கோவில் 21ஆம் படி அருகே சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது கோவில் தீட்சிதர்களான கனக சபாபதி மற்றும் வத்தன் ஆகிய இருவரும் கார்வண்ணனைத் தரக்குறைவாகப் பேசி கீழே தள்ளிவிட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கார்வண்ணன், சிதம்பரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 2 தீட்சிதர்கள் மீதும் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயம் அடைந்த கார்வண்ணன், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கார்வண்ணன்,தன்மையாக பேச வேண்டும். என் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். என்னால் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாத போது அநாவசியமாக விரட்டுவது, எதேச்சதிகாரமாக நடந்து கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதே மாதிரி தான் அனைவரிடமும் அவர் நடந்து கொள்கிறாரா? அவர் சர்வாதிகாரத்தை காட்டுகிறாரா? அவரது ஆணவத்தை இது வெளிப்படுத்துகிறது என்று கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே குழந்தை திருமணம், பக்தர்களைத் தாக்கியது சக தீட்சிதர்களை தாக்கியது என பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் தற்போது சிவ பக்தரை தாக்கிய புகாரிலும் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் சிக்கியுள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எவையெல்லாம் சட்ட விரோதமோ அவையெல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். சிதம்பரம் கோவிலில் பக்தர்கள் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் பின் வாங்கப்போவதில்லை என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். நகைகள் சரிபார்க்கும் பணியை தடுத்து நிறுத்தி நீதிமன்றம் செல்வோம் என அர்ச்சகர்கள் கூறுகின்றனர் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications