போதை ஆசாமியால் அடித்துக் கொல்லப்பட்ட அரசு பஸ் கண்டக்டர்...முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
போதை ஆசாமி தாக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் பெருமாள் பிள்ளை குடும்பத்தாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
சென்னை: பணியில் இருக்கும் போது போதை ஆசாமியால் அடித்துக் கொல்லப்பட்ட அரசு பேருந்து கண்டக்டர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, நடத்துனருக்கும் , பயணி ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்ட பயணி மதுபோதையில் இருந்துள்ளார். சண்டையில் பயணி தாக்கியதில் காயம் அடைந்த நடத்துனர் மேல்மருவத்தூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்த நடத்துனர் பெருமாள், கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 54. இச்சம்பவம் தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த பஸ் கண்டக்டர் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரண நிதி உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று அதிகாலை 3.15 மணியளவில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் கிளையைச் சார்ந்த அரசுப் பேருந்து சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வரும்போது, மதுராந்தகத்தில் குடிபோதையில் பேருந்தில் ஏறிய முருகன் என்ற பயணியிடம் நடத்துநர் தி.பெருமாள் பிள்ளை, பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்திய போது, அந்தப் பயணி நடத்துநரைத் தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக, நடத்துநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக அவர் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்தத் துயரமான செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநர் திரு. தி.பெருமாள் பிள்ளை அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு உடனடியாக பத்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.