“கலைஞர் பெற்று தந்த உரிமையுடன்.. கோட்டையில் கொடியேற்றினேன்!” முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை: நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார். இது குறித்து கூறிய அவர், முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை கலைஞர் பெற்றுத் தந்ததன் 50வது ஆண்டு இது என்றும் கலைஞர் பெற்று தந்த உரிமையுடன் கோட்டையில் கொடியேற்றினேன் எனவும் கூறியுள்ளார்.
அதாவது இந்தியா விடுதலை பெற்ற பின்பு, ஜனவரி 26-குடியரசு நாளன்று நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரும், ஆகஸ்ட்15-விடுதலை நாளன்று பிரதமரும் டில்லியில் தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். ஆனால் மாநில தலைநகர்களில் அந்த இரண்டு நாள்களிலும் ஆளுநரே தேசிய கொடியை ஏற்றி வந்தார்.

1969-ஆகஸ்ட் 15-ம் நாள் மாலையில் சென்னை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கலைஞர் ஆகஸ்ட் 15-ம் நாள் மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை முதலமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.
மத்திய அரசும் கலைஞரின் கோரிக்கையை ஏற்று மாநில தலைநகரங்களில் ஜனவரி 26 குடியரசு நாளன்று ஆளுநர்களும், ஆகஸ்ட் 15 விடுதலை நாளன்று முதலமைச்சர்களும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என்று ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து 1974 ஆகஸ்ட் 15-ம் நாள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரத்தில் முதலமைச்சர் மு.கருணாநிதி தேசிய கொடியை ஏற்றினார்.
இது வரலாற்று திருப்புமுனை. விடுதலை நாளன்று செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி முதல் முதலமைச்சர் கருணாநிதிதான். இவர் பெற்றுத் தந்த இந்த உரிமையால்தான், இந்தியாவில் உள்ள எல்லா மாநில முதலமைச்சர்களும் விடுதலை நாளன்று தேசிய கொடியை ஏற்றி வருகின்றனர். "சுதந்திரக் திருநாளில் மாநில முதல்வர் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த முதல்வர் கருணாநிதிதான்" என்று எம்.ஜி.ஆர் கலைஞரை வெகுவாகப் பாராட்டினார்.
இதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, "விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974-ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் பெற்றுத் தந்ததன் ஐம்பதாவது ஆண்டு இது! அந்த உரிமையுடன் 78-ஆவது விடுதலை நாளில் கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றினேன். எண்ணற்ற தியாகிகளின் தியாகங்களால் விளைந்த விடுதலையைப் போற்றுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications