அந்நிய முதலீடுகளை ஈர்க்க.. ஆக.27 அமெரிக்கா செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாட்டை தொழில் துறையில் மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார். இப்பயணத்தில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. 1991ம் ஆண்டில் தாராளமயமாக்குதல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, நாட்டின் தொழில் வளர்ச்சியை நிர்ணயிப்பதில், தனியார் துறையின் பங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.

தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபொழுது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் விரைவாக உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்புரட்சிக்கு இத்தொழில் கொள்கை வழிவகுத்தது.
தொழில் வளர்ச்சியினை மாநிலத்தில் துரிதமாக்கியது, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. இப்பெருந்திட்டங்களைச் சார்ந்து உதிரி, பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகும் சூழ்நிலை உண்டானது. எனவே அரசின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.
அதாவது, "உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும்" என்கிற கொள்கையோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இதனை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து பல அந்நிய முதலீடுகளை மாநில அரசு ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார்.
இதனையடுத்து இம்மாத இறுதியில் அவர் அமெரிக்கா செல்ல உள்ளார். இந்த பயணத்தில் முதலீட்டாளர்களை சந்தித்து பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அதாவது ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதாக, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து ஏற்கெனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாகத் தமிழகத்தை உயா்த்துவதே எங்களது அரசின் லட்சியம். தமிழ்நாடு என்பது பண்பாட்டின் முகவரியாக இருந்தது, இருந்து வருகிறது. அத்தகைய தமிழ்நாடு, முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக மாற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.
2030ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலா்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட பொருளாதாரமாக உருவாக்குவதே எங்களது குறிக்கோள். அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரது ஒத்துழைப்பையும் கோருகிறேன். தொழில்புரட்சி 4.0 மின் வாகனங்கள் உற்பத்தி, சூரிய மின்சக்தி கலன்கள், காற்றாலை கலன்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தரவு மையங்கள், மின்னணு வன்பொருள்கள் உற்பத்தி ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். தொழில்துறைப் புரட்சி 4.0 என்று அழைக்கப்படும் நான்காவது தொழிற்புரட்சி நமது மாநிலத்துக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகும்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications