தமிழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.. ராம்சார் தளங்கள் அதிகரிப்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: தமிழகத்தில் உள்ள மூன்று சதுப்பு நில பகுதிகள் ராம்சார் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்காக வனத்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புயல், வெள்ளப் பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடரிலிருந்து நிலப்பகுதிகளை காப்பதில் முக்கியப் பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவைத் தடுப்பதற்காக 1971ம் ஆண்டு ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் முதல் சர்வதேச மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்று உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு ராம்சார் பிரகடனம் என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் இந்தியா உட்பட 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதனால் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளை இந்தியாவும் கடைபிடித்து வருகிறது. உலக அளவில் சதுப்பு நிலங்கள் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்தியாவில் மட்டும் சதுப்பு நிலங்கள் 4,975 சதுர கி.மீ பரப்பளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ராமநாதபுரம், மன்னார் வளைகுடா தீவுகள், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சதுப்பு நிலங்கள் உள்ளன. ராம்சார் ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவில் 49 சதுப்பு நிலங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே கடந்த 2017ம்ஆண்டு மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்களை ராம்சார் தளங்களாக அறிவிப்பதற்கான முன்மொழிவை தமிழக அரசு அனுப்பியது. இந்த நிலையில் இந்தியாவில் 5 பகுதிகள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஐந்து இடங்களில் மூன்று இடங்கள் தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலமப்பகுதி, பிச்சாவரம் சதுப்பு நிலப்பகுதி மற்றும் கரிகிலி பறவைகள் சரணாலயம் ஆகியவை சர்வதேச முக்கியத்துவம் வாந்த ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கோடியக்கரையுடன் சேர்த்து தமிழ்நாட்டில் நான்கு ராம்சார் தளங்கள் உள்ளன. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதேபோல் மிசோரம் மாநிலத்தின் பாலா நிலமும் மத்திய பிரதேசத்தின் சாக்யா சாகர் ஆகியவை ராம்சார் தளங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 49ல் இருந்து 54க உயர்ந்துள்ளன.












Click it and Unblock the Notifications