ரூ.202கோடி மதிப்பில் கல்விசார் கட்டடங்களை திறந்த முதல்வர்! உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள ரூ.202 கோடி மதிப்பிலான கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார்.
அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருவதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

உயர்கல்வித் துறை
உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 202 கோடியே 7 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பல்வேறு முன்னெடுப்புகள்
தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை நான் முதல்வன் என்ற திட்டத்தின்கீழ் எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலிடம்
அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், பொருளாதாரத்தில் நலியுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

அமைச்சர் பொன்முடி
இதனிடையே தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். தனது சகோதரர் மறைந்து மூன்று நாட்கள் மட்டுமே ஆகும் நிலையிலும் தனக்காக நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டாம் எனக் கூறி ஏற்கனவே திட்டமிட்டபடி முதல்வருடன் இதில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications