உறவுகளுடன் தை பொங்கல்.. கோபாலபுரத்தில் முதல்வர் ஸ்டாலின்.. ஆசி வழங்கிய தயாளு அம்மாள்
சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் கோபாலபுரம் சென்று முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரது தாயார் தயாளு அம்மாள் ஆசி வழங்க.. சகோதரி செல்வி முத்தமிட்டு வாழ்த்தினார்.
தைப்பொங்கல் பண்டிகை இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் வழக்கமாக அணியும் வெள்ளை வேட்டி சட்டையை தவிர்த்து, பட்டு வேட்டியும் க்ரே கலர் சட்டையும் அணிந்து தை பொங்கலை தனது குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின் கூறிய வாழ்த்து செய்தியில் உழவு தமிழர்களின் தொழில் மட்டுமல்ல, பண்பாட்டு மரபு. அதனால்தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருநாளைக் கொண்டாடி வருகிறோம். தை முதல்நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெருநாளாக கொண்டாடி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக, தமிழகத்தில் திமுகவின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல, எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாள் என சொல்லத்தக்க வகையில், திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோபாலபுரம் இல்லத்தில் தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். இதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று உற்சாகம் பொங்கும் தமிழர் திருநாளில் உறவாக அன்பு செய்யும் உடன்பிறப்புகளுடன்... என்று வீடியோ பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அப்போது அவரது சகோதரி செல்வி முத்தமிட்டு வாழ்த்தினார்.

தமிழக அமைச்சர்கள் திரு. எஸ். இரகுபதி, திரு. அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், முனைவர் பழனிவேல் தியாகராஜன், திரு. செஞ்சி கே. எஸ்.மஸ்தான், திரு. சி.வி.கணேசன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். திமுக நிர்வாகிகள் வரும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
தயாநிதி மாறன் எம்.பி தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் அதனை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மு.க ஸ்டாலின் வீட்டு வாசலில் சமத்துவ பொங்கல் நல் வாழ்த்துக்கள் என்று கோலமிடப்பட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications