வக்பு வாரிய திருத்த மசோதா.. "திரும்ப பெறு" சட்டசபையில் முழங்கிய மு.க.ஸ்டாலின்.. பாஜக வெளிநடப்பு!
சென்னை: வக்ஃபு சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில், "திரும்ப பெறு.. திரும்ப பெறு.. வக்ஃபு சட்டத்தை திரும்ப பெறு" என்று முழக்கமிட, அதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் பின் தொடர்ந்தனர். இந்த விவாதத்தின் போது பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நள்ளிரவு வரை வக்ஃபு வாரிய திருத்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின.

இதன்பின் நள்ளிரவு 2 மணியளவில் லோக்சபாவில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லோக் சபாவில் வக்ஃபு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார். அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்களும் கருப்பு பேட்ஜ் அணிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை கண்டித்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். ஏற்கனவே வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளால் வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை எதிர்க்கின்றன.
இதனையும் மீறி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எதிராக விழுந்த வாக்குகள் அதிகமானது. மசோதா நிறைவேறுவதற்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்திருந்தாலும், சட்டத்திருத்தம் எதிர்க்கப்பப்பட வேண்டியது மட்டுமல்ல. முழுமையாக திரும்பப் பெற வேண்டியதே நமது கருத்து.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை எதிர்க்கட்சிகளையும் மீறி, கூட்டணி கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றி இருப்பது இந்திய அரசியலமைப்பு மீது செய்யப்பட்ட தாக்குதல் மட்டுமல்லாமல் மதநல்லிணக்கத்தை குலைக்கும் செயல் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் 3 எம்எல்ஏ-க்களும் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரும்ப பெறு.. திரும்ப பெறு.. வக்ஃபு சட்டத் திருத்தத்தை திரும்ப பெறு என்று முழக்கம் எழுப்ப, அதன்பின் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கள் கோஷத்தை பின் தொடர்ந்து எழுப்பினர். இதனால் சட்டசபையே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications