16 பாயிண்ட்..முதல்வர் டேபிளுக்கு போன ரிப்போர்ட்! இதுதானே எனக்கு மார்க் ஷீட்..பூரித்துப் போன ஸ்டாலின்
சென்னை: காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை முழுமை அடைந்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது எனவும், மக்கள் நல திட்டங்கள் குறித்த அறிக்கை தான் எனக்கு கிடைக்கும் மார்க் ஷீட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் மாநில திட்டக்குழுவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக் குழுவின் ஐந்தாவது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நான்காவது திட்டக் குழுவின் போது முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட புதுமை பெண் திட்டத்தின் தாக்கம் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் ஏற்பட்ட தாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின்,”கடந்த மாதம் என்னை சந்தித்த துணை தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் துறை சார்ந்த 16 அறிக்கைகளை அளித்தார். தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு திட்டமும் எந்த அளவுக்கு மக்களுக்கு பயனுள்ள திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அந்த அறிக்கையின் மூலமாக தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த அறிக்கையை தான் எங்களுக்கு தரப்படும் மார்க் சீட் ஆக நான் நினைக்கிறேன்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் மாணவர்கள் மட்டுமல்ல கல்வித்துறையில் நடைபெற்ற வளர்ச்சி என்ன, மக்களின் தேடி மருத்துவத் திட்டம் மூலம் கிராமப்புற சுகாதாரம் எந்த அளவிற்கு மேன்மையடைந்துள்ளது, நகர்ப்புறங்களில் வேலை வாய்ப்பு கூடியதால் சமூகம் அடைந்துள்ள வளர்ச்சி என்ன என்பது போன்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. அரசின் ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகை முழுமை அடைந்துள்ளது என்பதை விட மகிழ்ச்சியான செய்தி இருக்க முடியாது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகரித்துள்ளது. விடியல் பயணம் திட்டம் மூலம் பெண்களின் சமூக பங்களிப்பு அதிகமாகியுள்ளது. புதுமைப் பெண் திட்ட மூலம் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் ஒவ்வொரு பிரிவினரை உயர்த்தி வருகிறது.
சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை, மாநில சுயாட்சி, இன உரிமை ஆகிய கருத்தியல் அடித்தளத்தில் இயங்கும் இயக்கம் தான் திமுக. மாநிலத்தின் வளர்ச்சி என்பதும் அதன் அடிப்படையில் இருக்க வேண்டும். தொழில் வளர்ச்சி சமூக மாற்றம் கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம் கல்வி சமூகம் சிந்தனை செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி.
ஏற்றத்தாழ்வு பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் இல்லை என்பதை வளர்க்க வேண்டும் என நான் குறிப்பிட்டேன். இதே அடிப்படையில் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக எண்ணற்ற திட்டங்களை திட்டி உள்ளோம், இன்னும் திட்டங்கள் வர உள்ளன. மாநிலத் திட்டக் குழு மூலம் நான், புதிய புதிய சிந்தனைகளை திட்ட வடிவங்களை எதிர்பார்க்கிறேன். கவனம் பெறாத துறைகளில் கவனம் செலுத்தி புதிய திட்டங்களை உருவாக்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நாம் செயல்படுத்தி வரும் திட்டங்கள் எந்த அளவிற்கு சிறப்பானவை என்பதை உங்களின் அறிக்கைகள் சொல்கிறது. ஆலோசனை சொல்வதோடு கடமை முடிவதில்லை வழங்கிய ஆலோசனைகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.
ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு ஏதாவது தடை இருக்கிறதா என்பதை பாருங்கள். கடந்த முறை கல்லூரி மாணவர்களுக்கான இரு தேர்வு வினாத்தாள்கள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது அது செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள். வேளாண்மை, காடு, வெப்பம் அதிகரிப்பு குறித்த தங்களின் ஆலோசனைகள் துறை சார்ந்த நிர்வாக நடவடிக்கைகளாக எவ்வளவு மாறி உள்ளது என்பதை ஆய்வு மேற்கொள்ளுங்கள்.
மாநிலத் திட்டக் குழுவை இந்தியாவிலேயே முதல்முறையாக அமைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். ஒன்றிய அரசில் இருப்பது போல தமிழ்நாட்டிலும் இருக்க வேண்டும் என நினைத்ததற்கு காரணம் அனைத்து வளங்களையும் கொண்ட நாடாக தமிழ்நாடு அமைய வேண்டும் என்பதுதான். தன்னிறைவு பெற்றவையாக அனைத்து மாவட்டங்களையும் உருவாக்கினோம். எல்லா வளங்களும் இருக்கிறது என்ற நிலைமையை உருவாக்கி வருகிறோம். அனைத்து துறையும் சமச்சீராக வளர்ந்து வருகிறது. அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை மிக மிக அதிர்ச்சியை தந்துள்ளது. அந்த அறிக்கையை முன்மாதிரியாக கொண்டு ஒரு ஆய்வறிக்கையை வழங்க வேண்டும்.
நிதி வளத்தால் மட்டுமே இன்னும் பல திட்டங்களை நம்மால் உருவாக்க முடியும். நிதி வளத்தை பெருக்க ஆலோசனை சொல்லுங்கள். அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைய திட்டமிடுங்கள். காலதாமதமின்றி அனைத்து பயன்களையும் மக்கள் பெற்றாக வேண்டும். அதற்கான இலகுவான நிர்வாக சீர்திருத்தங்களை சொல்லுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். திராவிட மாடல் அரசின் நோக்கங்களை சாதனைகளை சொல்லும் வகையில் மாபெரும் கருத்தரங்கை சென்னையில் நடத்திட வேண்டும். அதில் பல்துறை அறிஞர்கள் ஊடகவியலாளர்கள் போன்றவர்களை பங்கேற்க வைத்து அவர்கள் ஆய்வு கட்டுரைகளை பெற்று அதனை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.















Click it and Unblock the Notifications