சிறார் குற்றங்களுக்கு தீர்வு காண ‘சிற்பி’ திட்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணும் வகையில் 'சிற்பி' என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்
சென்னையில் பெருகி வரும் குற்றச்செயல்களை தடுக்க, மாநகர காவல் துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை தொடங்க கடந்தாண்டு சென்னைகாவல் துறை முடிவெடுத்தது.
இதன்படி, சிறார் குற்றச்செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டவும் சென்னையில் சிற்பி என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, சென்னையில் 100 மாநகராட்சி பள்ளிகளில் தலா 50 மாணவர்களை கொண்டு சிற்பி திட்டத்தை சென்னை மாநகர காவல் துறை செயல்படுத்துகிறது.

சிற்பி திட்டம்
இந்தத் திட்டப்படி, 8ம் வகுப்பு முதல் உள்ள மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு தனி சீருடை வழங்கப்பட உள்ளது. அதேபோல் பள்ளிகளில் தேசிய மாணவர் படை போன்று இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.

மாணவர்களை நல்வழிபடுத்த திட்டம்
அத்துடன், மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுதல், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களின் திறன்களை மேம்படுத்துதல், சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாற்றும் வகையில், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து சட்ட கல்வியறிவு பெறச் செய்தல் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

விழிப்புணர்வு
இதுதவிர, காவல் கட்டுப்பாட்டு அறை அவசர எண், காவலன் செயலி, முதியோர் உதவி எண், காவல் கரங்கள் உள்ளிட்ட அவசர கால எண்கள் குறித்து மாணவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன், அவர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின்
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் பள்ளி மாணவர்களின் தகவல்களை பெறும் வகையில், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிற்பி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், சிறார் குற்றங்களை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிறார் குற்றங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தபடும் எனவும், காவல்துறையும் மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications