"கள ஆய்வில் முதலமைச்சர்" அடுத்ததாக பிப்.15,16ல் மு.க.ஸ்டாலின் பயணம்.. சேலம் மண்டலத்தில் ஆய்வு!
வேலூர் மண்டலத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சேலம் மண்டலத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
சென்னை: பிப்.15 மற்றும் 16 ஆகிய நாட்களில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மண்டலத்தை தொடர்ந்து அடுத்தக் கட்டமாக சேலம் மண்டலத்தில் மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "கள ஆய்வில் முதல்வர்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சென்று பல்வேறு திட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்கிறார்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக வேலூரில் கள ஆய்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட ஆய்வு பணியை தொடங்கினார். இதற்காக ரயில் மூலம் சென்னையில் இருந்து காட்பாடி சென்றார்.
சுடிதாரில் ஃபங்ஷனை கொண்டாடும் எதிர்நீச்சல் பெண்கள்.. குணசேகரன் எடுக்கப் போகும் அதிரடி முடிவு
முதல்வர் கள ஆய்வு
பின்னர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள ஆய்வுத் திட்டத்தின் முதல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். அப்போது போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
வேலூரில் ஆய்வு
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், சுகாதார நல மையத்தின் கட்டுமான பணிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுப் பணிக்கு பின், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆட்சியர்கள் மாற்றம்
அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா சமூக பாதுகாப்பு துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆய்வுப் பணிகளுக்கு பின் மாவட்ட ஆட்சியர்கள் உடனடியாக மாற்றப்பட்டது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிப்.15,16ல் ஆய்வு
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தக்கட்ட ஆய்வுப் பணிகளுக்கு தயாராகியுள்ளார். வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில் 4 மாவட்ட அரசுப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்த உள்ளார்.