முதல்வர் ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதி.. டிஸ்சார்ஜ் எப்போது? அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகள், கட்சி பொதுக்கூட்டங்கள் என தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் இன்றும் தலைமை செயலகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்றார். குறிப்பாக இன்று காலை தலைமை செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க ஸ்டலின் பிற்பகலில் தலைமை செயலகத்தில் இருந்து கிளம்பி சென்றார்.

இந்த நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக பிற்பகல் 3 மணியளவில் முதல்வர் மு.க ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் பரிசோதனை முடிந்து நாளை வீடு திரும்புவார் எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிக்கை இது தொடர்பான வெளியிடப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் மு.க ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவமனை பரிசோதனைக்கு பிறகு நாளை (செவ்வாய்க்கிழமை)மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (செவ்வாய்க்கிழமை)காலை 8 மணியளவில் முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று சொல்லப்படுகிறது. மாதம் தோறும் செய்யப்படும் மருத்துவ பரிசோதனைக்காக முதல்வர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முதல்வர் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications